சக பயணியை கொன்று புதைத்த இளம்பெண்: கனடாவில் பயங்கரம்
தென்கிழக்கு ஆல்பர்ட்டாவில் சக பயணியை கொன்று புதைத்த வழக்கில் இளம் பெண் ஒருவர் கைதாகியுள்ளார்.
கைதான 26 வயது பெண் மீது முதல் நிலை கொலை வழக்கு பதியப்பட்டுள்ளதுடன், மனித சடலத்தை அவமரியாதை செய்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கடந்த 19ம் திகதி Pincher Creek பகுதிக்கு வெளியே சிதைந்த நிலையில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இந்த நிலையில் விசாரணையை முன்னெடுத்த பொலிசார், சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட சடலமானது பெண் ஒருவருடையது எனவும், அது 34 வயதான Megan Eekma என்பதும் அடையாளம் காணப்பட்டது.
தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் Medicine Hat பகுதியை சேர்ந்த 26 வயது Melissa Lynn Martens-Lagasse என்பவர் சிக்கினார்.
நவம்பர் 23ம் திகதி கைது செய்யப்பட்டுள்ள அவர் மீது தற்போது முதல் நிலை கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் கோலம்பியாவில் இருந்து ஆல்பர்ட்டாவுக்கு பயணப்பட்ட இருவரும், ஒருகட்டத்தில் கொலை செய்யும் அளவுக்கு தூண்டப்பட்டிருக்கலாம் என பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த வழக்கின் உண்மை பின்னணி தொடர்பில் உரிய விசாரணைக்கு பின்னரே தெரியவரும் எனவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் விசாரணை அதிகாரிகளுக்கு உதவ முன்வர வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.