நூற்றுக்கும் அதிகமான பூனைகளுடன் வசித்து வந்த கனேடிய பெண்: பிழை விதித்த நீதிமன்றம்
கனடாவின் Saskatchewan பிராந்தியத்தில் நூற்றுக்கும் அதிகமான பூனைகளுடன் வசித்து வந்த பெண்மணி மீது வழக்கு பதியப்பட்டு பிழையும் விதிக்கப்பட்டுள்ளது.
விலங்குகளுக்கு துன்பத்தை ஏற்படுத்தியதாக கூறி அவர் மீது குற்றச்சாட்டை முன்வைத்த விலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் அவர் மீது வழக்கும் தொடர்ந்துள்ளனர்.
Saskatchewan பிராந்தியத்தில் குடியிருக்கும் குறித்த பெண்மணியின் குடியிருப்பில் இருந்து 106 பூனைகள், 2 நாய்கள் மற்றும் ஒரு ஆமை என கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
மேலும் சுமார் 20 பூனைகள் மூர்க்கத்தனமாக இருந்ததால் அவைகளை அங்கேயே விட்டுவிட்டதாகவும் விலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மட்டுமின்றி, ஒன்றைத் தவிர மீட்கப்பட்ட அனைத்து பூனைகளையும், அதிகாரிகள் கருணைக்கொலை செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும், விலங்குகளை துன்புறுத்துதல், கைநெகிழ்தல் உள்ளிட்ட பிரிவுகளில் குறித்த பெண்மணி மீது வழக்குப் பதிந்துள்ளதுடன், 400 டொலர் பிழையும் விதித்துள்ளனர்.
1996ல் இருந்து குறித்த பெண்மணி பூனைகளை தத்தெடுத்து வருவதுடன், பூனைகளுக்கான ஒரு சரணாலயம் அமைக்கவும் திட்டமிட்டு நிதியும் திரட்ட முடிவு செய்திருந்தனர்.
ஆனால் அவர்கள் திட்டமிட்டபடி எதுவும் நடக்காத நிலையில், நூற்றுக்கும் அதிகமான பூனைகளை, அவர் தமது குடியிருப்பிலேயே பாதுகாத்து வந்துள்ளார்.
இந்த நிலையிலேயே, விலங்குகளை முறைப்படி பாதுகாக்க தவறியதாக கூறி அவர் மீது விலங்குகள் பாதுகாப்பு அதிகாரிகள் வழக்கு பதிந்தனர். குறித்த பெண்மணியின் குடியிருப்புக்கு சென்றவர்கள் பலரும், பூனைகளின் பரிதாப நிலையை, நீதிமன்றத்தில் சாட்சியமாக அளித்துள்ளனர்.
இந்த நிலையில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் அவர் மீது 400 டொலர் பிழை விதித்ததுடன். ஒரே நேரத்தில் மூன்று பூனைகள் மற்றும் இரண்டு நாய்களை மட்டுமே இனி அவர் வளர்க்க முடியும் என தடையும் விதித்துள்ளனர்.