கனடாவில் வாடகை டாக்ஸிக்குள் இளம் பெண்ணுக்கு நடந்த கொடுமை
கனடாவில் வாடகை டாக்ஸி சாரதி ஒருவரால் தாம் கடத்தப்படும் முயற்சியில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பியதாக பூர்வக்குடி இளம் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
ஆனால் குறித்த இளம் பெண் மற்றும் அவரது தோழிகள் இருவர் டாக்ஸி சாரதியை மூர்க்கத்தனமாக தாக்கியதாகவும், ஓடும் வாகனத்தினுள் மது அருந்தியதாகவும் டாக்ஸி நிறுவனம் சார்பில் மறு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய சம்பவம் ஞாயிறன்று போர்டேஜ் அவென்யூ பகுதியில் அதிகாலையில் நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. Serenity Morrisseau என்ற 19 வயது பூர்வக்குடி பெண் அளித்த புகாரில், சம்பவத்தின் போது குறித்த வின்னிபெக் சாரதி தம்மையும் தமது தோழிகள் இருவரையும் இன்னொரு வாகனத்தில் அனுப்பி வைக்க முயன்றதாகவும்,
இதில் சந்தேகம் அடைந்த தாம் தொடர்புடைய நிகழ்வுகளை காணொளியாக பதிவு செய்ய தொடங்கியதாகவும் தெரிவித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த அந்த சாரதி தடாலென வண்டியை நிறுத்தியதும், தமது தோழிகள் இருவரும் பயத்தில் உடனடியாக வெளியேறியதாக கூறியுள்ளார்.
ஆனால் தம்மால் உடனையே அந்த வாகனத்தில் இருந்து வெளியேற முடியாமல் போகவே, அந்த சாரதி ஜன்னல் வழியாக நான்கு முறை குத்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதனால் ஸ்தம்பித்துப்போன தம்மை அந்த சாரதி மீண்டும் கொஞ்ச தூரம் வரையில் கொண்டு சென்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த சாரதி உண்மையில் தங்களை கடத்த முயன்றதாகவும், அதிர்ஷ்டவசமாகவே அந்த முயற்சியில் இருந்து தப்பியதாகவும் Serenity Morrisseau தெரிவித்துள்ளார்.
ஆனால், குறித்த வாடகை டாக்ஸி நிறுவனத்தின் பொது மேலாளர் சத்விந்தர் ஷாஹி தெரிவிக்கையில், தங்களது சாரதியே பாதிக்கப்பட்டவர் என்கிறார். அவரது முகத்தில் காயங்கள் ஏற்பட்டிருந்ததுடன், சட்டையும் கிழிக்கப்பட்டிருந்தது என தெரிவித்துள்ளார்.
மேலும், பயணிகளில் ஒருவர் ஓடும் வாகனத்தில் பீர் குடிக்க முயன்றதுடன், மாஸ்க் அணிய மறுத்ததுமே பிரச்சனைக்கு காரணம் என தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் தற்போது வின்னிபெக் பொலிசார் விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.