மாஸ்க் அணியவில்லையா எனக் கேட்ட கால்டாக்சி ஓட்டுநரை தாக்கிய பெண்!
மாஸ்க் அணியவில்லையா எனக் கேட்ட கால்டாக்சி ஓட்டுநரை காரில் பயணம் செய்த பெண் தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சான் பிரான்சிஸ்கோவில் கத்கா என்ற கார் ஓட்டுநர் தான் ஓட்டும் ஓலாவில் 3 பெண்களை ஏற்றிக்கொண்டு பயணத்தை தொடங்கியுள்ளார்.
அப்போது காரில் ஏறிய மற்றொரு பெண் மாஸ்க் அணியாமல் இருந்துள்ளார். மாஸ்க் அணியுமாறு கத்கா கேட்டுள்ளார். தன்னிடம் மாஸ்க் இல்லை அதனால் அணியவில்லை என அந்த பெண் தெரிவித்துள்ளார். உடனடியாக அருகில் இருந்த பெட்ரோல் பங்கில் காரை நிறுத்திய கத்கா, மாஸ்க் வாங்கி அணியுமாறு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள் ஓட்டுநரிடம் தகராறு செய்துள்ளனர்.
நேபாளத்தைச் சேர்ந்த கத்கா, 8 வருடங்களுக்கு முன்பு அமெரிக்கா வந்து பணி செய்து வருகிறார். இந்நிலையில் அங்குள்ளவர்களால் அவர் தாக்குதலுக்கு உள்ளான சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். காரை விட்டு இறங்காமல் மாஸ்கும் அணியாமல் 3 பெண்களும் ஓட்டுநரை தாக்கியுள்ளனர்.
ஓட்டுநரின் செல்போனை தூக்கி எறிந்தும், அவர் அணிந்திருந்த மாஸ்கை கிழித்தும் எறிந்துள்ளனர். மேலும், ஓட்டுநரின் முகத்தின் முன்பு வேண்டுமென்றே இருமியுள்ளனர். எங்களுக்கு கொரோனா என்றால் இனி உனக்கும் கொரோனா எனக் கூறி சத்தமிட்டு சிரித்து கிண்டலடித்துள்ளனர். இந்த சம்பவங்கள் அனைத்தும் காரில் உள்ள செக்யூரிட்டி கேமராவில் பதிவாகியுள்ளது. காரில் இருந்து இறங்கிய பெண்கள் பெப்பர் ஸ்பிரேவையும் ஓட்டுநர் மீது அடித்த்துச் சென்றுள்ளனர்.
இது குறித்து தெரிவித்துள்ள கார் ஓட்டுநர், நான் தவறாக எதுவுமே கூறவில்லை. நான் பேசத் தொடங்கியதுமே தெற்கு ஆசியாவைச் சேர்ந்தவன் என்பதை அவர்கள் தெரிந்துகொண்டனர். அதன் பின்புதான் தகராறு செய்யத் தொடங்கினர் என தெரிவித்துள்ளார். இது குறித்து பதிவிட்டுள்ள பயணிகளில் ஒருவர், அவர் எங்களை நடுரோட்டில் இறக்கிவிட பார்த்தார். அதனால் தான் தகராறு உண்டானது.
வைரலாக்க வேண்டுமென்பதற்காகவே வீடியோ எடிட் செய்யப்பட்டு பதிவிடப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதுவும் ஒருவகை இன ரீதியிலான தாக்குதல் என பலரும் கண்டனப்பதிவுகளை பதிவிட்டுள்ளனர். இது குறித்து ஓலா நிறுவனமும், போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.