ஊழியருக்கு தவறுதலாக 300 மடங்கு ஊதியம் அளித்த நிறுவனம்: பின்னர் நடந்த திடுக்கிடும் சம்பவம்
சிலி நாட்டில் ஊழியர் ஒருவருக்கு அவரது மாத ஊதியத்தைவிட 300 மடங்கு அதிகமாக வங்கியில் செலுத்தியுள்ளது ஒரு நிறுவனம்.
சிலி நாட்டில் உள்ள Consorcio Industrial de Alimentos என்ற நிறுவனத்தில் பணியாற்றும் அந்த ஊழியரின் மாத ஊதியம் 450 பவுண்டுகள் என கூறப்படுகிறது.
ஆனால் மே மாதத்தில் அவரது வங்கி கணக்கில் குறித்த நிறுவனமானது தவறுதலாக சுமார் 150,000 பவுண்டுகள் செலுத்தியுள்ளது. மட்டுமின்றி தவறு நடந்துள்ளதை உடனடியாக அந்த நிறுவன அதிகாரிகளும் கண்டறிந்துள்ளனர்.
இதனையடுத்து அந்த ஊழியரிடம் எடுத்துக்கூறிய நிர்வாகத்திடம், மொத்த தொகையையும் திருப்பி செலுத்த தாம் தயார் என அவர் தெரிவித்துள்ளார். மேலும், வங்கியில் இருந்து பணத்தை எடுத்துத் தருவதாகவும் கூறியுள்ளார்.
ஆனால் எதிர்பாராத திருப்பமாக பணத்தை மொத்தமாக எடுத்துக் கொண்டு அந்த நபர் ஓட்டம் பிடித்துள்ளார். தொடர்ந்து மூன்று நாட்கள் குறித்த நபரை தொடர்பு கொள்ள முயன்றும் முடியாமல் போயுள்ளது.
இதனிடையே அந்த நபரின் சட்டத்தரணி குறித்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு, வேலையை அவர் விட்டுவிடுவதாக கூறியுள்ளார். ஆனால், ஊழியர் மீது பணம் கையாடல் தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ளது அந்த நிறுவனம்.
இந்த விவகாரம் தொடர்பில் இதுவரை கைது நடவடிக்கை ஏதும் முன்னெடுக்கப்படவில்லை என்றே தெரிய வந்துள்ளது.