குடியிருப்பில் இருந்தே வேலை செய்ய விரும்பும் கனேடிய மக்கள்: ஆய்வில் தகவல்
கனடாவில் கொரோனா இறப்புகளும் பாதிப்புகளும் நாளும் சரிவடைந்து வந்தாலும், மக்கள் தங்கள் அலுவலகங்களுக்கு திரும்புவதில் ஆர்வம் காட்டவில்லை என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கனடாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் இறப்பு விகிதமும் சரிவடைந்து வருகிறது. தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
மாகாணங்கள் படிப்படியாக சாதாரண நிலைக்கு திரும்பும் நடவடிக்கைகளை திட்டமிட்டு வருகின்றன. இந்த நிலையில் பெருவாரியான கனேடிய மக்கள் குடியிருப்பில் இருந்து பணியாற்றுவதே சிறப்பான அனுபவம் என தெரிவித்துள்ளனர்.
சுமார் 82% கனேடியர்கள் கொரோனா காலத்தில் குடியிருப்பில் இருந்து பணியாற்றியது சிறந்த அனுபவம் என கூறியுள்ளனர். ஆனால் 20% மக்கள் நாள் தோறும் அலுவலகம் சென்று திரும்புவதே நல்ல அனுபவம் என கூறியுள்ளனர்.
இதில் 17% மக்கள் மட்டுமே குடியிருப்பில் இருந்து பணியாற்றுவது மிக மோசமான அனுபவம் என குறிப்பிட்டுள்ளனர். மேலும், சுமார் 60% கனேடியர்கள், வாய்ப்பு கிடைக்கும் போது எப்போதாவது அலுவலகம் செல்வதில் தவறில்லை என தெரிவித்துள்ளனர்.
ஆனால் 19% கனேடியர்கள் குடியிருப்பில் இருந்து பணியாற்றுவதே சிறந்தது எனவும், இனி மேல் அலுவலகம் திரும்ப தயாராக இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
வீட்டிலிருந்து தொடர்ந்து வேலை செய்ய விரும்புவதற்கான முதல் மூன்று காரணங்கள் வசதி, பணத்தை மிச்சப்படுத்துதல் மற்றும் உற்பத்தித்திறனை அதிகரித்தல் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அலுவலகம் சென்று பணியாற்ற கட்டாயப்படுத்தப்பட்டால், குடியிருப்பில் இருந்து பணியாற்ற அனுமதிக்கும் வேறு நிறுவனங்களுக்கு செல்லவும் 35% கனேடியர்கள் தயாராக இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.