ஒன்டாரியோ உயர்தர பாடசாலை மாணவர்களுக்குப் புதிய விதிமுறை: இறுதி மதிப்பெண்ணில் 25% வரை எழுத்துத் தேர்வுகளுக்கு ஒதுக்கீடு
ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான உயர்நிலைப் பாடசாலை மாணவர்களின் மதிப்பீட்டுத் தரநிலைகளில் (Assessment Standards) மாகாண அரசு புதிய கட்டாய மாற்றங்களை அறிவித்துள்ளது. இதன்படி, வரும் 2026-2027 கல்வியாண்டு முதல், கணிதம் (Math), ஆங்கிலம் (English) அறிவியல் (Science) ஆகிய முக்கிய பாடங்களுக்கான இறுதி மதிப்பெண்களைக் கணக்கிடுவதில் எழுத்துப்பூர்வ தேர்வுகள் முக்கியப் பங்கு வகிக்கும்.
9 மற்றும் 10 ஆம் வகுப்புகள்: இந்தப் பாடங்களின் இறுதி மதிப்பெண்ணில் 20 சதவீதம் எழுத்துத் தேர்வுகளின் அடிப்படையில் வழங்கப்படும். 11 மற்றும் 12 ஆம் வகுப்புகள்: இறுதி மதிப்பெண்ணில் 25 சதவீதம் எழுத்துத் தேர்வுகளின் அடிப்படையில் வழங்கப்படும். கணினி படிப்புகள் (Computer Studies) மற்றும் மனிதநேய பாடங்களில் (Humanities) எழுத்துத் தேர்வு மற்றும் இறுதிச் செயல்திட்டம் (Final Project) ஆகியவற்றிற்கு இடையே 10/15 சதவீதப் பகிர்வு இருக்கும்.

அதேசமயம், வேலைவாய்ப்புப் பயிற்சி மற்றும் கூட்டுறவுப் படிப்புகள் (Co-op) போன்ற சில குறிப்பிட்ட வகுப்புகளுக்கு இறுதித் தேர்வுகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. "இந்த மாற்றம் மாகாணம் முழுவதும் மதிப்பெண்கள் வழங்குவதில் சீரான தன்மையைக் கொண்டுவரும் என்றும், மாணவர்கள் உயர்நிலைப் பாடசாலைக்கு அடுத்தபடியான தங்களின் உயர்கல்விப் பாதைகளுக்குத் தயாராக இது உதவும்" என்றும் அரசு தெரிவித்துள்ளது.
கூடுதலாக, 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்குப் புதிய டிஜிட்டல் கற்றல் தளத்தை (Edwin platform) வழங்குவதற்காக ஒன்டாரியோ அரசு 60 மில்லியன் டொலர் செலவிடுவதாகவும் கல்வி அமைச்சர் போல் கலண்ட்ரா (Paul Calandra) தெரிவித்துள்ளார்.