7 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா சென்றார் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்
புதுடெல்லியில் நடைபெறும் 18 ஆவது பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங் இன்று இந்தியா வந்தடைந்தார்.
கடந்த 7 ஆண்டுகளில் அவர் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் வருகை இதுவாகும்.

சீன அரசாங்கத்தின் செய்தி நிறுவனமான சின்ஹுவாவின் (Xinhua) தகவல்படி, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொது அலுவலக பணிப்பாளரும் உயர்மட்ட அதிகாரியுமான சாய் சி (Cai Qi) மற்றும் வெளிவிவகார அமைச்சர் வாங் யீ (Wang Yi) ஆகியோர் ஜனாதிபதி ஸீ ஜின்பிங்குடன் வருகை தந்துள்ளனர்.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி ஸீ ஜின்பிங் இறுதியாக இந்தியா வந்திருந்தார்.
அதன் பின்னர், லடாக்கின் எல்லைப் பகுதிகளில் இரு நாட்டு இராணுவப் படைகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக இருதரப்பு உறவில் பதற்றம் நிலவி வந்தது.
இருப்பினும், கடந்த ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி சீனா சென்றிருந்த நிலையிலும், இரு நாடுகளும் உயர்மட்ட பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கியதன் மூலமும் இருதரப்பு உறவுகள் படிப்படியாக சீரடைந்து வருகின்றன.
இந்தநிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, இன்று மற்றும் நாளை ஆகிய இரு நாட்கள் நடைபெறும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங் கலந்து கொள்கிறார். இன்று மாலை அவர் பிரதமர் மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளமை குறிப்பிடத்தக்கது.