பிரித்தானியாவின் பல பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை
இங்கிலாந்தின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை முன்னறிவிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி, கனமழை மற்றும் இடியுடன் கூடிய மஞ்சள் எச்சரிக்கை வானிலை மையத்தால் விடுக்கப்பட்டுள்ளது.
சில பகுதிகளில் 40 மில்லி மீற்றர் வரை மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மஞ்சள் எச்சரிக்கை சனிக்கிழமை மதியத்திலிருந்து இரவு 10 மணி வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற வானிலை காரணமாக இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தில் வெள்ளம், மின்வெட்டு மற்றும் பயண இடையூறு ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், அடுத்த வாரம் இங்கிலாந்தில் வெயில் காலநிலையுடன் நிலைமைகள் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது,
“இரவு மற்றும் காலை நேரங்களில் மழை பெய்யும், அதிகாலையில் கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. பிற்பகலுக்குள் இவை மிகவும் பரவலாகி, ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதுடன் ஒரு மணி நேரத்திற்குள் 20 மில்லி மீற்றர் மழை பெய்யக் கூடும் என தெரிவித்துள்ளது.
மேலும் மின்னல் மற்றும் ஆலங்கட்டி சில இடங்களில் கூடுதல் அபாயங்களை ஏற்படுத்தக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.