ஏமனில் அகதிப் படகு கவிழ்ந்து 68 பேர் பலி
ஏமன் கடற்பரப்பில் படகு ஒன்று கவிழ்ந்ததில் குறைந்தது 68 ஆப்பிரிக்க அகதிகளும் புலம்பெயர்ந்தோரும் உயிரிழந்தாகவும், 74 பேர் மாயமாகியுள்ளதாகவும் ஐக்கிய நாடுகளின் சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பு (IOM) தெரிவித்துள்ளது.
ஏமனின் அப்யான் மாகாணத்தில் 154 எத்தியோப்பியர்களுடன் பயணித்த படகு கவிழ்ந்ததாக IOM-ன் ஏமன் பிரிவு தலைவர் அப்துசத்தோர் எசோவ் கூறினார்.
இந்த விபத்தில் 12 பேர் உயிர் தப்பியதாகவும், 54 அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோரின் உடல்கள் கான்ஃபர் மாவட்டத்தில் கரை ஒதுங்கியதாகவும், மற்ற 14 பேரின் உடல்கள் வேறொரு இடத்தில் கண்டெடுக்கப்பட்டு மருத்துவமனை பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக, ஏமனின் சுகாதார அதிகாரிகள் 54 பேர் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தியிருந்தனர்.
ஷக்ரா நகருக்கு அருகே உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும், கடுமையான சூழ்நிலைகளுக்கு மத்தியில் தேடுதல் பணிகள் தொடர்வதாகவும் ஏமன் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏமனுக்கும் ஆப்பிரிக்க கொம்பு பகுதிக்கும் இடையேயான நீர்வழி பாதை, அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் இரு திசைகளிலும் பயணிக்கும் ஆபத்தான ஆனால் பொதுவான பயணப் பாதையாக உள்ளது.