யானை தாக்குதலில் இளம் தாய் பலி; தெய்வாதீனமாக தப்பிய குழந்தை
மட்டக்களப்பு ஆயித்தியமலை மகிழவெட்டுவான் பகுதியில் யானை தாக்குதலில் இளம் தாயார் ஒருவர் உயிரிழந்ந்துள்ளார்.
இதன்போது 3 வயது குழந்தை தெய்வாதீனமாக உயிர் தப்பிய சம்பவம் திங்கட்கிழமை (04) அன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் மகிழவெட்டுவானை சேர்ந்த 35 வயதுடைய ரவிச்சந்திரன் பசுபதி என்பவரே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த பிரதேசத்தில் வீட்டின் முற்றத்தில் நேற்றிரவு (04) 7.00 மணியளவில் தனது 3 வயது பெண் குழந்தையுடன் தாய் இருந்துள்ளார்.
இதன்போது குடிமனைக்குள் உட்புகுந்த யானை அவர்கள் மீது தாக்கியதில் தாயார் சம்பவ இடத்திலே உயிரிழந்ததுடன் குழந்தை தெய்வாதீனமாக உயிர் தப்பினார்.
இதையடுத்து உயிர் தப்பிய குழந்தையை மீட்டதுடன் உயிரிழந்தவரின் சடலத்தை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.