கனடா முழுவதும் தேடப்படும் 17 வயது வாலிபர்: கைது நடவடிக்கை துரிதம்
ஒட்டாவாவில் கொலை வழக்கு தொடர்பில் 17 வயது வாலிபருக்கு எதிராக கைது நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒட்டாவா சமுதாய குடியிருப்பு கட்டிட வளாகத்தில் கடந்த 11ம் திகதி 18 வயதேயான Creflo Tansia என்ற இளைஞர் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டார். இன்னொரு 18 வயதானவரும் துப்பாக்கி குண்டு காயங்களுடன் உயிர் தப்பினார்.
இந்த வழக்கில் ஒட்டாவா பொலிசார் முன்னெடுத்த விசாரணையில் 17 வயது நபரே இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு காரணம் என தெரியவர, அவர் மீது வழக்கு பதியப்பட்டது.
இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் தனியாக செயல்படவில்லை என்றும் மற்ற சந்தேக நபர்களை அடையாளம் காண பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர் விசாரணை அதிகாரிகள்.
மட்டுமின்றி கனடா முழுவதும் தேடப்படும் குற்றவாளியாகவும் அவர் அறிவிக்கப்பட்டுள்ளார். Creflo Tansia என்ற இளைஞர் கொல்லப்பட்ட நாளில் தாக்குதலுக்கு இலக்கான இன்னொரு இளைஞர், 5 வாரங்களுக்கு முன்னர் கொலை முயற்சியில் இருந்து தப்பியுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
ஆனால் அன்றைய நாள் 20 வயதான Loris Tyson Ndongozi என்ற இளைஞர் கொல்லப்பட்டுள்ளார்.
கால்பந்து விளையாட்டில் ஆர்வம் கொண்ட அந்த இளைஞரை குறிவைத்து முன்னெடுக்கப்பட்ட தாக்குதல் அல்ல என்பது பின்னர் விசாரணையில் தெரிய வந்துள்ளது.