நடிகை ரோஜாவின் பதவி பறிப்பு...அதிரடி உத்தரவுகளை பிறப்பித்த ஜெகன்!
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நகரி தொகுதி எம்எல்ஏவான நடிகை ரோஜா, ஆந்திர மாநில தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு வாரிய தலைவராக இருந்தார்.
இந்நிலையில் ஜெகன் மோகன் ரெட்டி கொண்டு வந்த புதிய உத்தரவின் காரணமாக ரோஜாவின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் கடந்த 2019ம் ஆண்டு ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சி செய்து வருகிறது. மிகப்பெரிய பெரும்பான்மையுடன் ஜெகன் மோகன் ரெட்டி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தார்.
இந்நிலையில் ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் நகரி தொகுதி எம்எல்ஏவாக நடிகை ரோஜா 2019ம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்றார். அவருக்கு முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் அமைச்சரவையில் தருவார் என்று கடந்த 2019ம் ஆண்டு பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. ஏனெனில் ரோஜா, ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை கடுமையாக விமர்சித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு ரோஜாவின் பங்கு முக்கியமானதாக அப்போது கருதப்பட்டது ஆனால், ஜாதிவாரியாக அமைச்சர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டதன் காரணமாக , ரோஜாவுக்கு அமைச்சராகும் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனினும் ஆந்திர மாநில தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு துறையின் தலைவராக ரோஜாவை ஜெகன் மோகன் ரெட்டி நியமித்தார்.
கடந்த இரு வருடங்களாக அந்த பொறுப்பில் ரோஜா நீடித்து வந்தார். இந்நிலையில், எம்எல்ஏக்களுக்கு ஒரு பதவி மட்டுமே இருக்க வேண்டும் என ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன்ரெட்டி முடிவு செய்தார். இதன்படி எம்எல்ஏக்கள் வகித்து வந்த பதவிகள் அனைத்தையும் அவர் அதிரடியாக பறித்தார்.
அதில், நகரி தொகுதி எம்எல்ஏவான ரோஜா வகித்து வந்த ஆந்திர மாநில தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு வாரிய தலைவர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. ரோஜா மட்டுமின்றி மேலும் சில எம்ல்ஏக்கள் வகித்து வந்த பதவிகளும் பறிக்கப்பட்டிருக்கிறது.