அமெரிக்காவில் சாலை விபத்தில் இந்திய மாணவர்கள் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புரைய சரக்கு லாரி உரிமையாளர் பொலிசாரிடம் சரண்டைந்துள்ளார்.
அமெரிக்காவிலுள்ள டென்னஸி பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் வேளாண் கல்லூரி ஒன்றில் உணவு அறிவியல் பாடப்பிரிவில் முதுகலை பட்டப்படிப்பு பயின்று வரும் மாணவி ஜூடி ஸ்டான்லி (23). ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் மாணவா் வைபவ் கோபிசெட்டி (26). இருவரும், கடந்த மாதம் 28-ஆம் திகதி இரவு தெற்கு நாஸ்வில் பகுதியில் ஹாா்டிங்பிளேஸ் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, சரக்கு லாரி மோதி உயிரிழந்தனா்.
இந்த விபத்தை ஏற்படுத்திய சரக்கு லாரியின் உரிமையாளா் டேவிட் டோரஸ் (26) அங்கிருந்து தப்பிச் சென்று விட்டாா். இதனால் பொலிசார் அவரது முகவரிக்கு நோட்டீஸ் அனுப்பியதையடுத்து அவா் சரண் அடைந்ததாக மெட்ரோ நாஷ்வில் பொலிசார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து பொலிசார் கூறுகையில், விபத்து நடைபெற்றதும், உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவா்களைக் கூட காப்பாற்றாமல் விபத்து ஏற்படுத்திய டேவிட் டோரஸ் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடி விட்டதாக தெரிவித்தனா்.
உயிரிழந்த இந்திய மாணவ, மாணவி குறித்து அக்கல்லூரியின் வேளாண் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் துறையின் இணை பேராசிரியா் பாரத் போகரேல் கூறுகையில், கடினமான உழைப்பாளிகளான அந்த இருவரும் அப்பாவிகள். இரண்டு இளம் ஆற்றல்மிக்க விஞ்ஞானிகளின் வாழ்க்கையில் இதுபோன்று நடந்ததை என்னால் நம்ப முடியவில்லை என்று வேதனையுடன் கூறியுள்ளார்.