தடுப்பூசி போட்டுக்கொண்டால் 100 டாலர் பரிசு!
நியூயார்க்கில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு 100 டாலர் பரிசு வழங்கப்படும் என நியூயார்க் மேயர் டெ பிளாசியோ(de blasio) அறிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரசுக்கு எதிராக பல தடுப்பூசிகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர். பெரும்பாலானோர் தடுப்பூசி செலுத்திக்கொள்வதால் தற்போது பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது.
இதற்கிடையே டெல்டா வகை கொரோனா வைரஸ் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் அதிதீவிரமாக பரவுவதால் மீண்டும் பாதிப்பு அதிகரிக்கிறது. இதனால், அனைவரும் மீண்டும் முகக்கவசம் அணியும்படி, விரைந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ளவும் அதிபர் ஜோ பைடன் (joe biden)வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிலையில், தடுப்பூசிகள் செலுத்தும் பணிகளை விரைவுப்படுத்தும் நோக்கில், நியூயார்க்கில் வசிப்போருக்கு பரிசு தொகையை நியூயார்க் மேயர் டெ பிளாசியோ (de blasio) அறிவித்துள்ளார்.
நாளை முதல் செப்டம்பர் 2வது வாரத்திற்குள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் நியூயார்க் மக்களுக்கு 100 டாலர் பரிசு கிடைக்கும் என அறிவித்துள்ளார். மேலும், செப்டம்பருக்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ளதவர்களுக்கு வாரம்தோறும் பரிசோதனை செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் நியூயார்க்கில் இதுவரை 66 சதவீதம் பேர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளும், 71 சதவீதம் பேர் ஒரு டோஸ் தடுப்பூசியும் போட்டுக் கொண்டிருப்பதாகவும் மேயர் டெ பிளாசியோ (de blasio) தெரிவித்துள்ளார்.