பேஸ்பால் போட்டி பார்த்த இடத்தில் அடித்த அதிர்ஷ்டம்!
பேஸ்பால் விளையாட்டுப் போட்டியைக் கண்டு களித்துக் கொண்டிருந்தபோது, தாம் 10 மில்லியன் டாலர் லாட்டரி தொகையை வென்று மில்லியனரான செய்தியை அறிந்து ஒருவர் வியப்பில் ஆழ்ந்துள்ளார் கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு லொத்தர் சீட்டிலுப்பில் பணப்பரிசு வென்றுள்ளார்.
ஒன்ராறியோவின் கிங் சிட்டி பகுதியைச் சேர்ந்த பிராண்டன் ஜி, தனது உறவினர் பங்கேற்ற பேஸ்பால் தொடரைப் பார்வையாளர் மாடத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தபோது, அவரது கைபேசிக்கு 'ஒன்ராறியோ லாட்டரி மற்றும் சூதாட்டக் கழகத்திடமிருந்து' தொடர்ச்சியாகப் பல மின்னஞ்சல்கள் வந்தன.

ஆரம்பத்தில் அவற்றில் சில தேவையற்றவை என்று அவர் நினைத்தபோதிலும், தனது கணக்கில் லாக்-இன் செய்து பார்த்தபோது உண்மை தெரியவந்தது.
ஆரம்பத்தில் நான் 10,000 டொலர் மட்டுமே வென்றுள்ளதாக நினைத்தேன். ஆனால், பின்னர்தான் கூடுதல் பூஜ்ஜியங்களைக் கவனித்து, அது 10 மில்லியன் டொலர் என்பதை உணர்ந்து அதிர்ச்சியடைந்தேன் என தெரிவித்துள்ளார்.
உடனே ஆட்டம் நடந்த இடத்தில் இருந்து தனியாகச் சென்று, தனது துணைவியாரை அழைத்து இந்தச் செய்தியைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
வங்கிக் கணக்கில் பணம் வைப்பிலிடப்படும் வரை இந்த அதிர்ஷ்டத்தை இருவராலும் நம்பவே முடியவில்லையாம். 10 மில்லியன் டொலர் காசோலையைப் பெற்றுக்கொண்ட பிராண்டன், இந்த வெற்றி தமக்கு எதிர்காலத்தைப் பற்றிய மன அமைதியையும் பாதுகாப்பையும் தந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எனினும், பணி ஓய்வு பெற இன்னும் சில ஆண்டுகள் இருப்பதால், தொடர்ந்து பணியில் ஈடுபடவே திட்டமிட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.