பாகிஸ்தானில் மசூதிக்கு அருகில் வெடிகுண்டு தாக்குதல் ; 15 பேர் பலி
பாகிஸ்தானில், மசூதி அருகில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைபர் பக்துன்குவா மாகாணத்தின் கோஹட் மாவட்டத்தில் காவல் துறையினரின் குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள மசூதியின் அருகில் இன்று (18) மதியம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நடைபெற்ற சிறப்புத் தொழுகையின்போது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டதாகவும், சுமார் 50 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் தாக்குதலால், அந்தப் பகுதியில் பெரும் பள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், கூடுதல் பாதுகாப்புப் படையினர் அங்கு குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாகிஸ்தானிய ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இத்துடன், இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பெறுப்பேற்கவில்லை. மேலும், சமீபகாலமாக பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினருக்கு எதிரான பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் பாகிஸ்தானின் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட 199 பயங்கரவாதத் தாக்குதகளில் 158 பேர் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.