இந்தியாவில் இருந்து வருபவர்களுக்கு 12 நாட்கள் தனிமைப்படுத்துதல் கட்டாயம்; அறிவித்த நாடு
இந்தியாவில் இருந்து அபுதாபிக்கு வருகை தரும் பயணிகள் கட்டாயம் 12 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து தேசிய எதிகாத் விமான நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
அபுதாபி அவசரம், நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை கமிட்டி வெளியிட்டுள்ள தனிமைப்படுத்துதலுக்கான விதிமுறைகள் தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி பசுமை நாடுகளின் பட்டியலில் இடம்பெறாத இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து அபுதாபிக்கு வருகை தரும் பயணிகளுக்கு புதிய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
இதில், பசுமை நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ள பகுதிகளில் இருந்து அபுதாபிக்கு வருகை புரியும் பயணிகள் அபுதாபி விமான நிலையத்திற்கு வந்ததும் கட்டாயம் பி.சி.ஆர். பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இந்தியாவில் தொடர்ந்து ஆயிரக்கணக்கான குடியிருப்பு விசா பெற்றவர்கள் அபுதாபி வருவதற்கு முன்பதிவு செய்து வருகின்றனர்.
அவர்கள் தடுப்பூசி போட்டு குறைந்தது 14 நாட்கள் நிறைவடைந்திருக்க வேண்டும். இந்தியாவில் இருந்து அபுதாபிக்கு விமான பயணிகளுக்கு பி.சி.ஆர். பரிசோதனை கட்டாயம் செய்யப்படுகிறது. விமான நிலையத்தில் குடியேற்ற பிரிவு சோதனை நிறைவு பெற்றதும் அவர்களுக்கு மருத்துவத்துறையால் அங்கீகரிக்கப்பட்ட கைப்பட்டைகள் அணிவிக்கப்படுகிறது.
அதன் பின்னர் தங்களை அவர்கள் 12 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும். அந்த நேரத்தில் 6-வது நாளில் ஒரு பி.சி.ஆர். பரிசோதனையும், பிறகு 11-வது நாளில் பி.சி.ஆர். பரிசோதனையும் எடுத்துக்கொள்வது கட்டாயமாகும்.
இதேவேளை துபாயில் குடியிருப்பு விசா பெற்றவர்கள் அபுதாபிக்கு வர தடையில்லை. இதற்கு முன்னதாக அந்தந்த பகுதிகளில் விசா பெற்றவர்கள் மட்டுமே குறிப்பிட்ட விமான நிலையங்களுக்கு வருகை புரிய அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், தற்போது சிவில் விமான போக்குவரத்து ஆணையத்தின் வழிகாட்டுதல்படி இதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.