கனடாவில் சுற்றுலா சென்ற இடத்தில் சம்பவம்; மின் கசிவுவால் 12 மாணவர்கள் படுகாயம்!
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள புகழ்பெற்ற வாட்டர்பார்க் ஒன்றிற்குச் சுற்றுலா சென்ற பள்ளி மாணவர்கள், மின்சாரக் கசிவு காரணமாக விபத்துக்குள்ளானதில் 12 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில்லிவாக் பகுதிக்கு அருகிலுள்ள 'கல்டஸ் லேக் வாட்டர்பார்க்' என்ற பொழுதுபோக்கு பூங்காவிற்கு 'மினிகாடா' நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் கல்விச் சுற்றுலா சென்றிருந்தனர்.
அங்குள்ள ஒரு விளையாட்டுப் பகுதிக்குச் செல்வதற்காக மாணவர்கள் வரிசையில் நின்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நேரிட்டுள்ளது.

இது குறித்து பூங்காவின் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்ட்ரூ ஸ்டீனன்பெர்க் கருத்து வெளியிட்டுள்ளார்.
இந்த விபத்து மின்சாரக் கோளாறு காரணமாக ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது எனவும் காயமடைந்த குழந்தைகள் யாரும் விபத்து நடந்த நேரத்தில் தண்ணீருக்குள்ளோ அல்லது எந்தவொரு விளையாட்டு சாதனங்களின் மீதோ இருக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
ஆரம்பக்கட்ட தகவல்களின்படி, வரிசையில் நின்று கொண்டிருந்த குழந்தைகள் அங்கிருந்த இரும்புத் தடுப்புக் கம்பியை தொட்டபோது இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்தச் சம்பவம் மிகவும் வருத்தமளிப்பதாகக் கூறிய அவர், விபத்து குறித்து விசாரணை நடத்துவதற்காக வாட்டர்பார்க் அடுத்த 48 மணி நேரத்திற்கு மூடப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
ரிட்டிஷ் கொலம்பியாவின் மிகப்பெரிய வாட்டர்பார்க்காகக் கருதப்படும் இந்த பூங்கா, திங்கட்கிழமையன்று பொதுமக்களுக்கு மூடப்பட்டிருந்தாலும், பள்ளிக் குழந்தைகளின் சுற்றுலாவிற்காக மட்டும் பிரத்யேகமாக முன்பதிவு செய்யப்பட்டு இயங்கியபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.