டவ்தே புயலால் நடுக்கடலில் சிக்கிய படகு: 14 பேர் உயிரிழப்பு! 233 பேரின் நிலை?
மும்பை அருகே 273 பேருடன் நின்றுகொண்டிருந்த படகு ஒன்று எண்ணெய்க் கிணறு மீது மோதி கவிழ ஆரம்பித்தது. அதிலிருந்த 177 பேரை கடற்படையினர் மீட்டுள்ளனர். மாநிலத்தில் வீசிய புயல் காற்று காரணமாக 14 பேர் உயிரிழந்துள்ளனர். 18 பேர் காயம் அடைந்துள்ளனர். .
குஜராத்தில் கரையைக் கடந்த டவ்தே புயல் நேற்று மும்பையில் சேதத்தை ஏற்படுத்தியது. புயலால், நகரில் பலத்த காற்றுடன் சேர்ந்து கனமழை பெய்தது.
இந்த மழையால் நகரின் பல இடங்களில் மின்கசிவு ஏற்பட்டு, மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு மக்கள் பல மணி நேரம் இருளில் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. பல மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், வீட்டிலிருந்து வேலை செய்பவர்களும் பாதிக்கப்பட்டனர்.
இரவு வரை மும்பை விமான நிலையம் மூடப்பட்டது. தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கியதால் பேருந்து மற்றும் புறநகர் ரயில் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டன.
26 இடங்களில் சுவர் இடிந்து விழுந்த விபத்துகளில், 8 பேர் காயம் அடைந்தனர். பலத்த காற்று காரணமாக மும்பை மெட்ரோபாலிடன் பகுதியில் 600 மரங்கள் ஒடிந்து விழுந்தன.
ஓவல் மைதான், கொலாபா, ஹிந்த்மாதா, கிங் சர்க்கிள், தாதர் டிடி போன்ற இடங்களில் மழை நீர் தேங்கி போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
மும்பையிலிருந்து 120 கிலோமீட்டர் தூரத்தில் டவ்தே புயல், மும்பையைக் கடந்து குஜராத் நோக்கிச் சென்று கரையக் கடந்தது. புயலால் மும்பையில் 214 மி.மீ அளவுக்கு மழை பெய்துள்ளது.
இதற்கு முன்பு 2000-ம் ஆண்டு மே மாதம் 190 மி.மீ அளவுக்கு மழை பெய்திருந்தது. 40 ஆண்டுகள் கழித்து ஒரே நாளில் இவ்வளவு மழையை ஒரு புயல் ஏற்படுத்தியிருப்பது இதுவே முதன்முறையாகும்.
இந்தப் புயலின் தாக்கம் காரணமாக கடலில் தொடர்ந்து பலத்த காற்று வீசியது. இதனால் மும்பை அருகில் நடுக்கடலில் இருக்கும் ஹீரா எண்ணெய்க் கிணற்றுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த மிகப்பெரிய படகில் ஓ.என்.ஜி.சி ஊழியர்கள் 273 பேர் தங்கி இருந்தனர்.
அந்தப் படகு ஊழியர்களின் தங்குமிடமாகப் பயன்படுத்தப்பட்டுவந்தது. புயலால் நங்கூரமிடப்பட்டிருந்த அந்தப் படகு, நங்கூரத்தையும் மீறி காற்றில் நகரத் தொடங்கியது.
போராடி அதை மீண்டும் நங்கூரமிட்டு நிலை நிறுத்தினர். ஆனால் இரவில் சூறாவளிக் காற்று காரணமாக மீண்டும் படகு நங்கூரத்தை இழுத்துக்கொண்டு அருகில் இருந்த எண்ணெய்க் கிணற்றின் மீது மோதியது.
இதில் படகு சேதமடைந்து அதற்குள் தண்ணீர் சென்றது. இதனால் படகு கவிழ ஆரம்பித்தது. ஏற்கெனவே அந்தப் படகு விபத்தில் சிக்கியிருப்பதாக வந்த செய்தியைத் தொடர்ந்து கடற்படை கப்பல்கள் ஹீரா எண்ணெய்க் கிணறு நோக்கிச் சென்றது. மூன்று கப்பல்கள் சம்பவ இடத்தை அடைந்து படகில் இருந்தவர்களை மீட்க ஆரம்பித்தன.
காலை வரை 146 பேரை மட்டுமே மீட்க முடிந்தது. காலையில் மீண்டும் ஹெலிகாப்டர் உதவியுடன் தொடர்ந்து தேடியதில் 177 பேர் உயிரோடு மீட்கப்பட்டனர். எஞ்சியவர்களை தொடர்ந்து தேடி வருகின்றனர் .
மகாராஷ்டிராவில் பலத்த காற்று மற்றும் கன மழையால் 2,500 வீடுகள் சேதமடைந்தன. புயல் காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதியில் 14 பேர் உயிரிழந்தனர். அதிகமான உயிரிழப்புகள் கொங்கன் பகுதியில்தான் நடந்துள்ளன. இது தவிர 18 பேர் காயம் அடைந்துள்ளனர்.
மகாராஷ்டிரா மட்டுமல்லாமல் அருகிலுள்ள கோவாவிலும் புயலால் பலத்த சேதம் ஏற்பட்டது. கோவா முழுக்க மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு மக்கள் மின்சாரம் இல்லாமல் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது. போர்க்கால அடிப்படையில் மின் இணைப்பைச் சரிசெய்ய ஊழியர்கள் பணியாற்றிவருகின்றனர்.