153 ஊடகங்கள் மூடல்...தாலிபான்களின் அட்டூழியம்
ஆப்கான் நாட்டின் தாலிபான்கள் பயங்கரவாதிகள் பொறுப்பேற்ற பின் நாடு முழுவதும் உள்ள 153 ஊடகங்கள் இதுவரை மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டில் அமெரிக்கப் படைகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கடந்த 20 ஆண்டுகளாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க ராணுவ படையினர், கடந்த மாதம் 31ஆம் திகதி ஆப்கானிஸ்தானில் இருந்து முழுமையாக வெளியேறினர்.
இதனையடுத்து ஆப்கானிஸ்தான் நாட்டில் அத்துமீறி உள்ளே நுழைந்த தலிபான் பயங்கரவாதிகள் தற்போது ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆட்சியையும் அமைத்துள்ளனர். தாலிபான்கள் ஆட்சி செய்து வருவதால், அந்த நாட்டில் பெண்களின் உரிமைகள், பத்திரிகை சுதந்திரம் உள்ளிட்டவை பெரும் கேள்விக்குறியாக உள்ளது என்று உலக நாடுகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டில் இயங்கி வந்த பத்திரிகை மற்றும் ஊடகங்கள் சுமார் 153 நிறுவனங்கள் தாலிபான்களின் அட்டூழியத்தால் மூடப்பட்டுள்ளது என்ற அறிவிப்பு வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டின் பத்திரிக்கையாளர் கூட்டமைப்பின் துணைத்தலைவர் தெரிவிக்கையில், "தாலிபான் அமைப்பை ஆதரிக்கும் ஊடகங்கள் மீது கவனம் செலுத்தவில்லை என்றால், மற்ற ஊடகங்கள் மூடும் நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது" என்று தெரிவித்து உள்ளார்.