மலையேற்ற வீரர்களின் சிறுநீரால் 154 டன் பனி உருகுகிறதா? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்
இமயமலைத் தொடரில் அமைந்துள்ள உலகின் உயரமான சிகரமான எவரெஸ்ட் சிகரத்தில் மலையேற்ற வீரர்களின் மனித நடவடிக்கைகளும் பனிப்பாறைகள் உருகுவதற்கு குறிப்பிடத்தக்க அளவில் பங்களிப்பதாக புதிய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
குறிப்பாக, எவரெஸ்ட் அடிவார முகாம் அமைந்துள்ள கும்பு (Khumbu) பனிப்பாறைப் பகுதியில் மலையேற்ற வீரர்கள் சிறுநீர் கழிப்பதும் அப்பகுதியில் பனி உருகுவதற்கு ஒரு காரணியாக அமைவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

'Regional Environmental Change' என்ற சர்வதேச அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையிலேயே இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேபாள நில அளவைத் துறையின் சிரேஷ்ட ஆய்வாளர் கிம் லால் கௌதம் (Khim Lal Gautam) உள்ளிட்ட சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழுவொன்று, 2023ஆம் ஆண்டு வசந்த காலத்தில் கும்பு பனிப்பாறைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மனித நடவடிக்கைகள் தொடர்பில் விரிவான ஆய்வை மேற்கொண்டது.
இந்த ஆய்வின்படி, 2023ஆம் ஆண்டில் எவரெஸ்ட் அடிவார முகாமில் மலையேற்ற வீரர்கள் மற்றும் அவர்களுடன் பணியாற்றிய வழிகாட்டிகளின் பல்வேறு மனித நடவடிக்கைகளால் சுமார் 2,492 டன் பனி உருகியுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
அதில், மலையேற்ற வீரர்கள் சிறுநீர் கழித்ததன் காரணமாக மட்டும் சுமார் 154 டன் பனி உருகியிருக்கலாம் என ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
எவரெஸ்ட் மலையேற்றப் பருவம் பொதுவாக சுமார் 50 நாட்கள் நீடிக்கும் நிலையில், அந்தக் காலப்பகுதியில் மலையேற்ற வீரர்கள் மற்றும் வழிகாட்டிகளால் நாளொன்றுக்கு 6,000 லீற்றருக்கும் அதிகமான சிறுநீர் வெளியேற்றப்படுவதாக ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதிக உயரமான பகுதிகளில் உடலின் நீர்ச்சத்தைப் பேணுவதற்காக மலையேற்ற வீரர்கள் அதிகளவில் தண்ணீர் அருந்துவதால், இவ்வாறு அதிகளவு சிறுநீர் வெளியேற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திடக்கழிவுகள் பெருமளவில் அகற்றப்பட்டு வந்தாலும், சிறுநீர் நேரடியாக பனிப்பாறைகளின் மீது வெளியேற்றப்படுவது சுற்றுச்சூழல் ரீதியாக புதிய சிக்கலை ஏற்படுத்துவதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சிறுநீரில் உள்ள திரவத்தின் வெப்பம் மற்றும் அதனுடன் தொடர்புடைய வெப்ப ஆற்றல் காரணமாக பனியின் உருகும் செயற்பாடு அதிகரிக்கக்கூடும் என ஆய்வில் கணிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, எவரெஸ்ட் அடிவார முகாமில் சமையல், வெப்பமூட்டுதல் மற்றும் மின்சாரத் தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் எரிபொருட்களிலிருந்து வெளியாகும் வெப்பமும் பனி உருகுதலுக்கு பங்களிப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான மனித நடவடிக்கைகளின் ஒட்டுமொத்த தாக்கத்தின் காரணமாகவே 2023ஆம் ஆண்டு மலையேற்றப் பருவத்தில் கும்பு பனிப்பாறைப் பகுதியில் சுமார் 2,492 டன் பனி உருகியிருக்கலாம் என ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், காலநிலை மாற்றம் மற்றும் உலகளாவிய வெப்பநிலை அதிகரிப்பே எவரெஸ்ட் உள்ளிட்ட இமயமலைப் பனிப்பாறைகள் உருகுவதற்கான பிரதான காரணம் என்பதை ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
அதேநேரத்தில், எவரெஸ்ட் அடிவார முகாம் போன்ற அதிகமான மனிதர்கள் கூடும் பகுதிகளில் இடம்பெறும் அன்றாட நடவடிக்கைகள் உள்ளூர் வெப்பநிலையை அதிகரித்து, ஏற்கனவே காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள பனிப்பாறைகளின் உருகும் வேகத்தை மேலும் துரிதப்படுத்தக்கூடும் என ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதனால், எவரெஸ்ட் பகுதியில் அதிகரித்து வரும் மலையேற்ற சுற்றுலாவின் சுற்றுச்சூழல் தாக்கங்களை கருத்திற்கொண்டு, மனிதக் கழிவுகள் மற்றும் எரிபொருள் பயன்பாடு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேலும் முறையாக நிர்வகிக்க வேண்டியதன் அவசியத்தையும் இந்த ஆய்வு எடுத்துக்காட்டுகிறது.
உலகின் மிக உயரமான சிகரத்தைச் சுற்றியுள்ள பனிப்பாறைகள் காலநிலை மாற்றத்தால் ஏற்கனவே வேகமாக மாற்றமடைந்து வரும் நிலையில், மனித நடவடிக்கைகளின் சிறியதாகத் தோன்றும் தாக்கங்கள்கூட நீண்டகாலத்தில் முக்கியமான சுற்றுச்சூழல் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.