கனடா துப்பாக்கிச்சூடு கொலை வழக்கு ; இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை
அல்பெர்ட்டா மாகாணத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டு நடந்த கொடூரமான சாலை ஓரத் துப்பாக்கிச்சூடு வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீதான கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
தீர்ப்பு வெளியானவுடன், உயிரிழந்தவரின் மனைவி அரசுத் தரப்பு வழக்கறிஞரைக் கட்டிப்பிடித்துக் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.
கல்கரி நகரின் கிழக்கே உள்ள கிராமப்புறச் சாலையில், ராக்கி வியூ கவுண்டியைச் சேர்ந்த ஊழியரான காலின் ஹாஃப் என்பவர் கடந்த ஆகஸ்ட் 6, 2024 அன்று சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த வழக்கில் ஆர்தர் பென்னர், எலிஜா ஸ்ட்ராபெரி ஆகிய இருவரையும் இரண்டாம் நிலை கொலைக் குற்றவாளிகள் என ஜூரி குழுவினர் சனிக்கிழமை அறிவித்தனர். சுமார் 14 மணி நேர தீவிர ஆலோசனைக்குப் பிறகே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
தீர்ப்பு வாசிக்கப்பட்டதும், உயிரிழந்த காலின் ஹாஃப்பின் மனைவி லாரி ஹாஃப் அரசுத் தரப்பு வழக்கறிஞர் போட்டினி பொபடாடோவை கட்டிப்பிடித்து, கண்ணீர் விட்டார்.
குற்றம் சாட்டப்பட்ட பென்னர் மற்றும் ஸ்ட்ராபெரி இருவரும் எந்தவித சலனமும் இன்றி, கைகளைக் கட்டிக்கொண்டு தீர்ப்பைக் கேட்டு நின்றனர்.
இருவர் மீதும் ஆயுதமேந்திய கொள்ளை மற்றும் கொலைக் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கு 25 ஆண்டுகள் கட்டாய ஆயுள் தண்டனை விதிக்கப்படவுள்ளது.