இஸ்ரேல் வான்தாக்குதலில் 22 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு!
காசா முனைப் பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதலில் 22 பாலஸ்தீனியர்கள் பலியாகி இருப்பது உலக அரங்கை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
கிழக்கு ஜெருசலேம், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன மோதலின் முக்கிய மையமாக உள்ளது. இந்தப் பகுதியை இரு தரப்பினரும் சொந்தம் கொண்டாடி வருகின்றனர்.
1967-ம் ஆண்டு நடந்த போருக்குப் பின்னர் இந்த கிழக்கு ஜெருசலேம் நகரை இஸ்ரேல் ஆக்கிரமித்தது. 1980-ம் ஆண்டு இஸ்ரேல் அரசு அதை தங்களோடு இணைத்தும் கொண்டது.
அங்கு ஷைக் ஜாரா மாவட்டத்தில் உள்ள பாலஸ்தீனியர்கள், யூத குடியேறிகளால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட வாய்ப்பு உருவாகி இருக்கிறது. இது பாலஸ்தீனிய மக்களை கோபத்துக்கு ஆளாக்கி உள்ளது.
இது தொடர்பாக அங்கே கோர்ட்டில் ஒரு வழக்கும் விசாரணையில் உள்ளது. இதனால்தான் பாலஸ்தீனியர்களுக்கும், இஸ்ரேல் போலீஸ் படையினருக்கும் இடையே கடந்த பல நாட்களாக மோதல்கள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமையன்று ஜெருசலேம் நகரில் இரு தரப்பினருக்கும் இடையே நடந்த பயங்கர மோதலில் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்கள் காயம் அடைந்தனர்.
இதன் பின்பு தாங்களும் திருப்பித்தாக்கப்போவதாக காசா பகுதியை நிர்வகித்து வருகிற ஹமாஸ் அமைப்பினர் எச்சரிக்கை விடுத்தனர்.
மேலும் இஸ்ரேலை நோக்கி ஹமாஸ் அமைப்பினர் ராக்கெட்டுகளை வீசினர்.
இந்த ராக்கெட் வீச்சுக்கு பதிலடி கொடுப்போம் என இஸ்ரேல் எச்சரித்தது. இதுபற்றி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ கூறுகையில், “ஹமாஸ் அமைப்பினர் எச்சரிக்கை கோட்டை தாண்டி விட்டனர். இஸ்ரேல் பலத்த சக்தியுடன் தக்க பதிலடி கொடுக்கும்” என குறிப்பிட்டார்.
அதே போன்று நேற்று முன்தினம் இரவில், காசா முனைப்பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் கடுமையான வான்தாக்குதல் நடத்தியது. கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிற சண்டைகளில் இது மிகுந்த ரத்தக்களறியை ஏற்படுத்தியது.
இந்த தாக்குதலில் 20 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகின. ஆனால் பாலஸ்தீனிய சுகாதார அதிகாரிகள், குழந்தைகள் உள்பட 22 பேர் கொல்லப்பட்டதாகவும், 15 பேர் ஹமாஸ் அமைப்பினர் என்றும் தெரிவித்தனர்.
கொல்லப்பட்டவர்களில் ஹமாஸ் அமைப்பின் தளபதி ஒருவரும் அடங்குவார் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ள வேளையில், இந்தத் தாக்குதலானது உலக அரங்கை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
இஸ்ரேலும், பாலஸ்தீனியர்களும் அமைதி காக்க வேண்டும், முடிந்த அளவுக்கு விரைவாக பதற்றத்தைத் தணித்துக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா, ஐரோப்பிய கூட்டமைப்பு, இங்கிலாந்து ஆகியவை கேட்டுக்கொண்டுள்ளன.