25,000 அமெரிக்கர்கள் இறந்திருப்பார்கள் ; அடுத்த குண்டை போட்ட ட்ரம்ப்
கரீபியனில் இருந்து அமெரிக்காவை நோக்கி வந்துகொண்டிருந்த சந்தேகத்திற்குரிய போதைப்பொருள் கடத்தல் நீர்மூழ்கிக் கப்பலை அமெரிக்க ராணுவம் குண்டுபோட்டு அழித்ததாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சனிக்கிழமை அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சோசியல் பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், “அமெரிக்காவை நோக்கிச் வந்து கொண்டிருந்த மிகப் பெரிய போதைப்பொருள் சுமந்து செல்லும் நீர்மூழ்கிக் கப்பலை அழித்தது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய மரியாதை.
நீர்மூழ்கி கப்பல்
இந்தக் கப்பலில் பெரும்பாலும் ஃபெண்டானைல் மற்றும் பிற சட்டவிரோத போதைப்பொருள்கள் இருந்ததை அமெரிக்க உளவுத்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் ஈகுவடார் மற்றும் கொலம்பியாவிற்கு திருப்பி அனுப்பப்படுவார்கள்.
இந்தப் போதைப் பொருள் நீர்மூழ்கி கப்பல் மட்டும் அமெரிக்காவுக்குள் வந்திருந்தால் 25,000 அமெரிக்கர்கள் பரிதாபமாக உயிரிழந்திருப்பார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
பெண்டகன் வெளியிட்டுள்ள பதிவில், “கடலில் நீர்மூழ்கி கப்பல் ஒன்று செல்வதையும் அதன்மீது குண்டு போட்டு அந்தக் கப்பலை அழிப்பதையும்” விடியோ பதிவில் காட்டுகிறது.
செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் இருந்து கரீபியனில் போதைப் பொருள் கடத்திவரும் நீர்மூழ்கிக் கப்பல்கள் மீது அமெரிக்கா நடத்திய ஆறாவது தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.