சட்டவிரோத பயணம் ; அந்தமான் கடலில் படகுடன் 250 ஏதிலிகள் மாயம்; வெளியான பகீர் தகவல்
அந்தமான் கடலில் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் என அதிகப்படியானோர் பயணித்த படகொன்று, சீரற்ற காலநிலை மற்றும் மேலதிக பாரம் காரணமாக அந்தமான் கடலில் மூழ்கியுள்ளதாக ஐக்கிய நாடுகள் ஏதிலிகள் முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மியான்மரில் நிலவும் உள்நாட்டுப் போர் மற்றும் அடக்குமுறைகளிலிருந்து தப்பித்து, மலேசியா போன்ற நாடுகளுக்குச் செல்லும் நோக்கில் ஏதிலிகள் ஆபத்தான கடல் பயணங்களை மேற்கொள்கின்றனர்.

ஆள்கடத்தலில் ஈடுபட்ட சந்தேகநபர்கள்
இந்நிலையில் இந்தோனேசியா நோக்கிப் பயணித்த பங்களாதேஷ் கடலோர காவற்படை கப்பலொன்று, ஏப்ரல் 9 ஆம் திகதி கடலில் மிதந்து கொண்டிருந்த ஒரு பெண் உள்ளிட்ட 9 பேரைக் காப்பாற்றியுள்ளது.
"நாங்கள் சுமார் 36 மணிநேரம் கடலில் மிதந்தோம். படகின் என்ஜினிலிருந்து வெளியேறிய எண்ணெயால் எனது உடல் வெந்தது. படகிற்குள் ஏற்பட்ட நெரிசல் காரணமாக மூச்சுத்திணறி 25 முதல் 30 பேர் உயிரிழந்தனர்" என உயிர் தப்பிய ரபிகுல் இஸ்லாம் என்பவர் தெரிவித்துள்ளார்.
மீட்கப்பட்ட 9 பேரில் 6 பேர் ஆள்கடத்தலில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் என அடையாளம் காணப்பட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மலேசியாவில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி இவர்கள் ஏதிலிகளை ஏமாற்றி அழைத்துச் சென்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ரோஹிங்கியா மக்களின் நீண்டகால இடப்பெயர்வு மற்றும் அவர்களுக்கான நிரந்தரத் தீர்வுகள் இல்லாததே இவ்வாறான உயிராபத்தான சம்பவங்களுக்குக் காரணம் என ஐக்கிய நாடுகள் ஏதிலிகள் முகவர் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
2017 ஆம் ஆண்டு மியான்மர் இராணுவத்தின் தாக்குதலைத் தொடர்ந்து சுமார் 730,000 ரோஹிங்கியா மக்கள் பங்களாதேஷில் தஞ்சம் புகுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.