சிகிச்சைக்கு வந்த 299 பெண்களிடம் பாலியல் சேட்டை - பிரான்ஸில் பரபரப்பு
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த வைத்தியர் ஒருவர், தன்னிடம் சிகிச்சைக்கு வந்த 299 பேரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பிரான்ஸில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் நாட்டின் வான்னெஸ் நகரை சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணரான வைத்தியர் ஜோயல் லிஸ்கோர்னெக் மீது ஏற்கனவே குழந்தைகள் தொடர்பான ஆபாச புகைப்படங்களை வைத்திருந்ததாக கடந்த 2005-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாலியல் புகார்
இந்த நிலையில்,குறித்த வைத்தியர் மீது ஏராளமான பெண்கள் பாலியல் புகார் கொடுத்துள்ளதுடன் அவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சமயத்தில் 18 வயதிற்குட்பட்டவர்களாக இருந்துள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், குறித்த வைத்தியர் இதுவரை 299 பேரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார் என தெரியவந்துள்ளதுடன், அவர் கடந்த 1989-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை பணிபுரிந்து வந்த மருத்துவமனைகளில் இந்த பாலியல் அத்துமீறல்கள் அரங்கேறியுள்ளன.
குறிப்பாக நோயாளிகள் மயக்க நிலையில் இருக்கும்போது அவர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக விசாரணையின்போது தெரிவித்துள்ளார். அது மட்டுமின்றி, குறித்த வைத்தியர் தனது மகனின் தோழிகளையும் பாலியல் வன்கொடுமை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பாலியல் அத்துமீறல் வழக்கு பிரான்ஸ் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.