எங்களை யாராலும் தடுக்க முடியாது... கனடாவுக்குள் பறந்து வந்த 4,500 புலம்பெயர்ந்தோர்!
புலம்பெயர்தல் என்ற வார்த்தை மனிதர்களுடன் மட்டுமல்ல பறவைகள் மற்றும் சில விலங்குகளுடனும் தொடர்புடையது என்பதை நம்மில் எத்தனை பேர் இன்றைய சூழலில் நினைவில் வைத்திருக்கிறோமா தெரியாது.
இப்போதெல்லாம் புலம்பெயர்தல் என்றாலே மனிதர்கள் மட்டுமே நினைவில் வருகிறார்கள். அதுவும், மனிதர்களுக்குத்தான் புலம்பெயர்வதில் எத்தனை தடைகள்?
ஆனால், உங்கள் தடைகள் எல்லாம் எங்களை ஒன்றும் செய்யாது என்பது போல, சுமார் 4,500 பறவைகள் புலம்பெயர்ந்து கனடாவுக்குள் வந்துள்ளன.
தெற்கே வெனிசுலா நாட்டிலிருந்து வடக்கே அலாஸ்கா வரை சுமார் 9,000 கிலோமீற்றர் தூரம் பயணித்து செல்லும் உழவாரக் குருவி அல்லது உழவாரன் என்று அழைக்கப்படும் Vaux's swifts என்னும் பறவைகள், வழியில் மரங்களிலுள்ள பொந்துகளில் தங்கி ஓய்வெடுப்பதுண்டு.
இப்போது மரங்கள் குறைந்துபோனதால், அவை மனிதர்கள் அமைத்துள்ள கட்டிடங்கள் மீது தங்கி இளைப்பாறிச் செல்கின்றன. அந்த வகையில், சுமார் 4,500 உழவாரக் குருவிகள், கனடாவிலுள்ள Courtenay Museum என்ற அருங்காட்சியகத்திலுள்ள புகைபோக்கியில் தஞ்சமடைந்துள்ளன.
பொதுவாக, இப்படி பறவைகள் வந்து ஆயிரக்கணக்கில் தங்கினால், அந்த இடம் அவற்றின் எச்சத்தால் நிறைந்துவிடும். அதை சுத்தம் செய்வதே பெரிய வேலையாக இருக்கும்.
ஆனால், பறவைகளை விரும்பும் Courtenay Museum ஊழியர்களோ, அந்த புகைபோக்கியை சுத்தம் செய்து இந்த குருவிகளுக்காக தயாராக வைத்திருந்திருக்கிறார்கள்.
கனடாவில் சில வாரங்கள் தங்கும் இந்த பறவைகள், ஒரு நாள் திடீரென சொல்லாமல் கொள்ளாமல் புறப்பட்டுவிடும் என்பதால், அவற்றை ஓய்வெடுக்க விட்டு, எட்ட நின்று வேடிக்கை பார்த்து மகிழ்கிறார்கள் அப்பகுதி மக்கள்.