சீனாவுடனான பதற்றத்திற்கு மத்தியில் தாய்வானின் இராணுவப் பயிற்சி ஆரம்பம்
தாய்வானில் தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் நடைபெறவுள்ள விரிவான இராணுவப் பயிற்சி இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
போர்க்கள சூழ்நிலையை யதார்த்தமாக உருவகப்படுத்தும் நவீன இராணுவ தயார்நிலைத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தப் பயிற்சி முன்னெடுக்கப்படுவதாக தாய்வான் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இன்று ஆரம்பமான இந்தப் பயிற்சியில், அனைத்து மட்டங்களிலும் உள்ள இராணுவப் பிரிவுகள் பங்கேற்கவுள்ளதுடன், போர் நடைமுறைகள் மற்றும் உண்மையான போர்க்களச் சூழல்களுக்கு வீரர்களைத் தயார்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை நடைபெறவுள்ள இந்த நடவடிக்கை, தாய்வான் ஆயுதப் படைகளின் வருடாந்திர திட்டமிடப்பட்ட கூட்டு இராணுவப் பயிற்சியின் ஒரு பகுதியாகும் என உத்தியோகபூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தாய்வானை தனது இறையாண்மைக்கு உட்பட்ட பகுதியாக சீனா தொடர்ந்து உரிமை கோரி வரும் நிலையில், இந்தப் பயிற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதனிடையே, தாய்வானைச் சுற்றியுள்ள வான்வெளி மற்றும் கடற்பரப்புகளில் சீன ஆயுதப் படைகள் வழமையாகச் செயற்பட்டு வருவதாகவும், இரு தரப்புகளுக்கிடையிலான பதற்ற நிலை தொடர்ந்து நீடித்து வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு சூழ்நிலைக்கு இந்த இராணுவப் பயிற்சிகள் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என பாதுகாப்பு ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.