ஈரான் பெண் பாடகி மற்றும் 7 கலைஞர்களுக்கு தலா 74 சாட்டையடி தண்டனை!
ஈரானைச் சேர்ந்த பிரபல பெண் பாடகியான பரஸ்தூ மற்றும் அவருடன் இணைந்து பணியாற்றிய 7 கலைஞர்களுக்கு தலா 74 சாட்டையடிகள் வழங்கி ஈரான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. யூடியூப் தளத்தில் தங்களது இசைக் கச்சேரியை நேரலை செய்ததற்காக இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக, உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பாரம்பரிய ‘காரவன்செராய்’ வளாகத்தில், ஒரு பெரிய பெர்சியன் கம்பளம் மட்டுமே விரித்து வைக்கப்பட்டிருந்த மங்கலான வெளிச்சம் கொண்ட மேடையில் இந்தக் கச்சேரி நடைபெற்றது.
ஈரானில் பெண்கள் பொதுவெளியில் பாடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பெண்கள் கண்ணியமான ஆடைகளை அணிய வேண்டும் மற்றும் ஹிஜாப் அணிய வேண்டும் என்பதும் சட்டமாகும்.

ஆனால், இந்தக் கச்சேரியின்போது அனைத்து இசைக் கலைஞர்களும் கருப்பு நிற உடைகளை அணிந்திருந்தனர். பாடகி அகமதியோ ஹிஜாப் அணியாமல், ஸ்ட்ராப் வைத்த நீண்ட சட்டை அணிந்து, பாடல் பாடியிருந்தார்.
கடந்த டிசம்பர் 2024 இல் அகமதி தனது சொந்த யூடியூப் சேனலில் இந்த கச்சேரியை நேரலை செய்தார். இந்த வீடியோ இதுவரை 30 லட்சத்திற்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது.
மேலும், பிற சமூக ஊடகப் பக்கங்களிலும் பல லட்சம் பேரால் இது பார்க்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் 74 சாட்டையடிகள், 2 ஆண்டுகள் கலை நடவடிக்கைகளில் ஈடுபடத் தடை மற்றும் நாட்டை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கச்சேரி நடந்த சில நாட்களிலேயே, அதாவது டிசம்பர் 2024 இல், அகமதி, முன்சவி மற்றும் இதர இசைக் கலைஞர்கள் அனைவரும் காவல்துறையினரால் காவலில் எடுக்கப்பட்டனர்.
பின்னர் அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் அப்போது தெரிவித்தன. ஈரானின் அதிகாரப்பூர்வ நீதித்துறை இணையதளமான 'மிசான் ஆன்லைன்' (Mizan Online), "சட்ட மற்றும் மத நெறிமுறைகளைப் பின்பற்றாமல் இசை அமைத்ததற்காக" இவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டதாகக் குறிப்பிட்டிருந்தது.