அகதிகள் படகு கடலில் கவிழ்ந்ததில் பெண்கள் குழந்தைகள் உட்பட 42 பேர் பரிதாபமாக பலி
ஐரோப்பா நோக்கி பயணித்த அகதிகள் படகு கடலில் கவிழ்ந்ததில் பெண்கள் குழந்தைகள் உட்பட 42 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு போர் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு தஞ்சம்கோரி அகதிகளாக செல்கின்றனர்.
இவர்களில் பெரும்பாலானோர் கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக படகுகளில் பயணம் செய்து ஐரோப்பாவை அடைய முற்படுகின்றனர். அவர்களின் இதுபோன்ற ஆபத்தான பயணங்கள் பல நேரங்களில் துயரத்தில் முடிந்து விடுகிறது.
இந்தநிலையில் ஏமனை சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட அகதிகள் படகு ஒன்றில் ஜரோப்பா நோக்கி புறப்பட்ட நிலையில் வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான ஜிபூட்டி அருகே கடலில் சென்று கொண்டிருந்த போது அவர்கள் பயணித்த படகு சற்றும் எதிர்பாராத விதமாக கடலில் கவிழ்ந்தது.
இதில் படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கி தத்தளித்த நிலையில் அது குறித்த தகவல் கிடைத்ததும் ஜிபூட்டி நாட்டின் கடலோர காவல் படையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். எனினும் அவர்கள் செல்வதற்குள் பெண்கள், சிறுவர்கள் உட்பட 42 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
அதேசமயம் நீரில் தத்தளித்துக்கொண்டிருந்த 14 பேரை கடலோர காவல்படையினர் பத்திரமாக மீட்ட நிலையில் மேலும் இந்த விபத்தில் சுமார் 10 பேர் மாயமாகி உள்ளதாக கூறப்படுகின்ற அதேவேளை அவர்களை தேடும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.