அமெரிக்காவிலிருந்து கனடாவிற்கு கடத்தப்பட்ட 215 கிலோ கொக்கைன் பறிமுதல்
அமெரிக்காவிலிருந்து கனடாவிற்குள் நுழைய முயன்ற இரண்டு லாரிகளிலிருந்து 215.5 கிலோகிராம் எடையுள்ள கொக்கைன் போதைப்பொருளை அல்பெர்ட்டா எல்லைப் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
தெற்கு அல்பெர்ட்டாவில் உள்ள கோட்ஸ் எல்லைச் சோதனைச் சாவடியில் கனடா எல்லைச் சேவைகள் முகவர் நிலைய அதிகாரிகள் நடத்திய சோதனையின்போதே இந்த போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
சோதனையிடப்பட்ட முதல் லாரியில், அறிவிக்கப்பட்ட சரக்குகளுக்கு இடையே மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 பெட்டிகளுக்குள் இருந்து 80 கொக்கைன் கட்டிகள் கண்டறியப்பட்டன.

இதிலிருந்து 90.94 கிலோகிராம் கொக்கைன் கைப்பற்றப்பட்டதுடன், அதன் ஓட்டுநரும் உடனிருந்த பயணியும் கைது செய்யப்பட்டனர்.
இரண்டாவது லாரியில் மேற்கொள்ளப்பட்ட இரண்டாம் கட்ட சோதனையின் போது 107 கொக்கைன் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதிலிருந்து 124.6 கிலோகிராம் கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அதன் ஓட்டுநரும் கைது செய்யப்பட்டார்.
கோட்ஸ் நுழைவாயிலில் மேற்கொள்ளப்பட்ட இந்த மிகப்பெரிய போதைப்பொருள் பறிமுதல், சட்டவிரோத போதைப்பொருட்கள் கனடாவிற்குள் நுழைந்து எமது சமூகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதைத் தடுப்பதில் எமது எல்லைச் சேவை அதிகாரிகளின் விழிப்புணர்வையும் திறமையையும் அர்ப்பணிப்பையும் காட்டுகிறது என எல்லைப் பாதுகாப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டில் மட்டும் அல்பெர்ட்டாவில் உள்ள எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் 1,054 கிலோகிராம் கொக்கைன் உட்பட மொத்தம் 1,292 முறை சட்டவிரோத போதைப்பொருட்களைப் பறிமுதல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.