கனடாவில் தீப்பற்றி எரிந்த வாகனத்திற்குள் சடலம் மீட்பு
கனடாவின் விக்டோரியா நகரில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வாகனம் தீப்பற்றிய சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காலை 7 மணியளவில் விக்டோரியா பொலிஸ் திணைக்கள அதிகாரி ஒருவர் பணிக்குச் சென்று கொண்டிருந்தபோதே, குயின்ஸ் அவென்யூவின் 700 ஆவது பகுதியில் வாகனம் ஒன்று தீப்பற்றி எரிவதைக் கண்டுள்ளார்.
உடனடியாக அவர் 911 என்ற அவசர இலக்கத்திற்கு அழைப்பு விடுத்ததையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் சில நிமிடங்களில் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

எனினும், அந்த வாகனத்திற்குள் ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். பாதிக்கப்பட்டவர் குறித்தோ அல்லது தீப்பற்றிய வாகனம் குறித்தோ மேலதிக விவரங்கள் எதையும் பொலிஸார் இதுவரை வெளியிடவில்லை.
விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளதால், விசாரணையின் நேர்மையைப் பாதுகாக்கும் பொருட்டு தற்போது மேலதிக விவரங்களை வெளியிட முடியாது பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் அதிகாலை 3 மணி முதல் காலை 7 மணி வரையான காலப்பகுதியில், டக்ளஸ் அல்லது பிளான்ஷார்ட் வீதிகள் வழியாகச் சென்ற வாகனங்களின் கேமரா பதிவுகள் அல்லது தகவல்கள் வைத்திருப்போர் உடனடியாக புலனாய்வாளர்களைத் தொடர்புகொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து புலனாய்வாளர்கள் சோதனைகளை மேற்கொண்டதால், அப்பகுதியில் பல மணிநேரம் போக்குவரத்து முழுமையாகத் தடைப்பட்டிருந்தது.