இத்தாலியில் கைவிடப்பட்ட எண்ணெய் கப்பலில் இருந்த 50 அகதிகள் கைது
இத்தாலி கடற்பகுதி அருகே கைவிடப்பட்ட எண்ணெய் கப்பல் ஒன்றிலிருந்து 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடலோர பொலிசார் அங்கு சென்று விசாரித்தபோது அவர்கள் லிபியாவில் இருந்து சட்ட விரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைய முயன்றதும், படகு பழுதானதால் கைவிடப்பட்ட எண்ணெய் கப்பலில் தஞ்சம் அடைந்ததும் தெரிய வந்தது.
இதனையடுத்து அந்த கப்பலில் இருந்தவர்களை கைது செய்த கடலோர பொலிசார் அனைவரையும் அகதிகள் முகாமில் ஒப்படைத்தனர்.
ஆப்பிரிக்க நாடுகளில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் ஏராளமானோர் ஐரோப்பிய நாடுகளில் குடியேற விரும்புகின்றனர்.
இதற்காக பெரும்பாலும் சட்ட விரோத படகு பயணத்தையே தேர்ந்தெடுக்கின்றனர். அவற்றில் பல பயணங்கள் ஆபத்தில் முடிகிறது.
இதனை கட்டுப்படுத்த எல்லையோர பகுதியில் ஐரோப்பிய நாடுகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றன.