காசாவில் 60,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற்றோரை இழந்து தவிப்பு
காசா முனையில் 2023 அக்டோபர் மாதம் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 60,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்களது பெற்றோர் அல்லது பெற்றோர் ஒருவரை இழந்துள்ளதாகக் காசா சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்சம் 60,737 குழந்தைகள் தங்களது தாய் அல்லது தந்தையை இழந்துள்ளனர். இதில் 52,095 குழந்தைகள் தந்தையையும், 5,929 குழந்தைகள் தாயையும் இழந்துள்ளனர்.
2,713 குழந்தைகள் தாய், தந்தை இருவரையும் இழந்து அனாதைகளாகியுள்ளனர் என காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், 2,276 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 8,858 நபர்கள் முற்றிலும் உயிரிழந்து, குடிமக்கள் பதிவேட்டில் இருந்தே அவர்களின் பெயர்கள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2023 அக்டோபர் முதல் இதுவரை 73,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஒக்டோபரில் போர்நிறுத்த ஒப்பந்தம் மேற்கொண்டும் கூட, இஸ்ரேல் காசா முழுவதும் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்களில், போர்நிறுத்தத்திற்குப் பின்னர் மட்டும் 1,100-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.