ஓமன் நாட்டுக்கு வந்த இந்திய பயணிகள் 7 பேருக்கு கொரோனா தொற்று!
ஓமன் நாட்டுக்கு வந்த இந்திய பயணிகள் 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது விமான நிலைய பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் அதே விமானத்தில் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஓமன் அரசின் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:,
ஓமன் நாட்டில் அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. இதன் காரணமாக சமீபத்தில் இரவு நேர ஊரடங்கில் இருந்த கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.
இதேபோல் வெளிநாடுகளில் இருந்து ஓமன் நாட்டுக்கு வரும் பயணிகள் அனைவருக்கும் விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நேற்று இந்தியாவில் இருந்து மஸ்கட் சர்வதேச விமான நிலையத்துக்கு வந்த பயணிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டது. இந்த பரிசோதனை முடிவுகளில், 7 பயணிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து அவர்கள் அனைவரும் வந்த விமானத்திலேயே இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். ஓமன் நாட்டுக்கு வரும் பயணிகள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து வர வேண்டும். முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஓமன் நாட்டில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்ததை விட நடப்பு மாதத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. அதாவது இந்த எண்ணிக்கையானது கடந்த மாதத்தில் இருந்ததை விட 62 சதவீதம் குறைந்துள்ளது. அதேபோல் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எனவே பொதுமக்கள் கொரோனா பரவலை தடுக்க முக கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். இதன் மூலம் கொரோனா பரவுவது கட்டுப்படுத்தப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.