ஜூலை 4 ஆம் திகதிக்குள் 70 சதவீத அமெரிக்கர்களுக்கு கொரோனா தடுப்பூசி - ஜோ பைடன்
அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமடைந்து வருகிறது. பைசர், மாடர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய 3 நிறுவனங்களின் கொரோனா தடுப்பூசிகள் அமெரிக்காவில் பயன்பாட்டில் உள்ளன.
12 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள அனுமதிக்கபப்ட்டுள்ளது. இதற்கிடையில், அமெரிக்காவில் இதுவரை 29 கோடியே 69 லட்சத்து 12 ஆயிரத்து 892 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதில், 16 கோடியே 87 லட்சத்து 34 ஆயிரத்து 435 பேருக்கு தடுப்பூசியின் முதல் டோஸ் போடப்பட்டுள்ளது.
இது அந்நாட்டு மொத்த மக்கள் தொகையில் 50.8 சதவிகிதம் ஆகும். அதேவேளை 13 கோடியே 61 லட்சத்து 55 ஆயிரத்து 250 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் செலுத்தப்பட்டுள்ளது.
இது அந்நாட்டு மொத்த மக்கள் தொகையில் 41 சதவிகிதம் ஆகும். இந்நிலையில், அமெரிக்க சுதந்திரம் ஆண்டு தோறும் ஜூலை 4-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு சுதந்திர தின கொண்டாட்ட நாளான ஜூலை 4-ம் தேதிக்குள் நாட்டு மக்களில் 70 சதவிகிதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கொரோனா தாக்குதலுக்கு இதுவரை 5 லட்சத்து 92 ஆயிரத்து 232 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.