கியூபா சோசலிச பொருளாதாரத்தில் அதிரடி மாற்றம்
அமெரிக்காவின் கடும் பொருளாதாரத் தடைகள் மற்றும் நீடித்த பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில், கியூபா தனது சோசலிச பொருளாதாரக் கொள்கையில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க மசோதாவுக்கு நாடாளுமன்றத்தில் ஒருமனதாக ஒப்புதல் வழங்கியுள்ளது.
1959ஆம் ஆண்டு ஃபிடல் காஸ்ட்ரோ தலைமையில் நடைபெற்ற புரட்சிக்குப் பின்னர், கியூபாவின் பொருளாதார அமைப்பில் மேற்கொள்ளப்படும் மிகப் பெரிய சீர்திருத்தமாக இந்த நடவடிக்கை கருதப்படுகிறது.

அதேவேளை, சந்தைப் பொருளாதாரத்தை நோக்கிய முக்கிய முன்னேற்றமாகவும் இது பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள், எரிபொருள் விநியோகப் பிரச்சினைகள் மற்றும் சுற்றுலாத்துறையின் வீழ்ச்சி ஆகிய காரணங்களால் கியூபா கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
இதன் தாக்கமாக இலவச கல்வி மற்றும் சுகாதார சேவைகள் உள்ளிட்ட பல அரசு நலத்திட்டங்களும் சவால்களை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புதிய சட்டத்தின் கீழ், முதன்முறையாக தனியார்மயமாக்கலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், அரசு நிறுவனங்கள் தனியார் முதலீடுகள் மற்றும் பங்குதாரர் அமைப்புகளைக் கொண்ட வர்த்தக நிறுவனங்களாக மாற்றப்படவுள்ளன.
மேலும், தனியார் நிறுவனங்கள் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணியமர்த்துவதற்கும், ஒரே நபர் ஒன்றுக்கு மேற்பட்ட தொழில்களை ஆரம்பித்து நடத்துவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கியூபாவின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பவும், முதலீடுகளை ஈர்க்கவும், வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும் இந்த சீர்திருத்தங்கள் உதவும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.