அமெரிக்காவில் காரில் அடைக்கப்பட்ட சிறுவன்; தாய் கூறிய காரணத்தால் சுகாதார ஊழியர்கள் அதிர்ச்சி!
அமெரிக்காவில் தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக கொரோனா பாதித்த மகனை காரின் பின்புறத்தில் வைத்து பூட்டிய தாயை போலீசார் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த சாரா பீம் என்ற 41 வயது ஆசிரியை, கடந்த 3 ஆம் திகதி அங்குள்ள ‘டிரைவ்-த்ரூ’ கொரோனா பரிசோதனை மையத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு இத்தகைய மையங்களில் வாகனங்களில் இருந்தபடியே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில் சாரா பீம், கொரோனா பரிசோதனை செய்வதற்காக காரில் சென்றபோது அங்கிருந்த ஊழியர்கள், காரின் பின்புறத்தில் இருந்து சத்தம் வருவதை கவனித்துள்ளனர்.
அது குறித்து சாராவிடம் கேட்ட போது, காரின் பின்புறத்தில் தனது 13 வயது மகனை பூட்டி வைத்திருப்பதாக அவர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சுகாதார ஊழியர்கள், உடனடியாக அவரது மகனை வெளியே விடுமாறு கூறியபோது, தனது மகனுக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாகவும், தனக்கு கொரோனா ஏற்படாமல் பாதுகாக்கவே அவனை காரின் பின்புறத்தில் வைத்து பூட்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இன்னொரு பரிசோதனை மூலம் தனது மகனுக்கு கொரோனா இருக்கிறதா என்பதை உறுதி செய்யப்போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் காரிலிருந்து சிறுவனை வெளியே விடாவிட்டால் பரிசோதனை செய்ய மாட்டோம் எனக் கூறிய சுகாதார ஊழியர்கள், உடனடியாக அது குறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பரிசோதனை மையத்திற்கு விரைந்து வந்த பொலிசார், சிறுவனை மீட்டு அவனது தாய் சாராவை கைது செய்தனர்.
சம்பவம் தொடர்பில் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திய வழக்கில் சாரா கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், அதிர்ஷ்டவசமாக சிறுவனுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.