துயரம் மிகுந்த நாள்: கனடாவில் பேரணி நடத்திய ஆப்கான் மக்கள்
தாலிபான்களின் தற்போதைய செயல்களைக் கண்டித்து, ஆப்கான் மக்கள் மிசிசாகாவில் ஒன்று திரண்டு பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை நடந்த இப்பேரணியில் கலந்து கொண்ட ஆப்கான் மக்கள், தங்கள் கைகளில் பதாகைகள் ஏந்தி, ஆப்கானிஸ்தானை காப்பாற்றுங்கள், குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் உதவுங்கள், யுத்தத்தை நிறுத்துங்கள் என அதில் வாசகங்கள் பொறிக்கப்பட்டிருந்தது.
நூற்றுக்கணக்கான ஆப்கான் மக்களால் முன்னெடுக்கப்பட்ட இந்த பேரணியில், பலர் சர்வதேச சமூகம் ஒன்றிணைந்து ஆப்கானை காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
ஞாயிற்றுக்கிழமை தாலிபான் பயங்கரவாதிகள் ஆப்கான் தலைநகர் காபூல் நகருக்குள் நுழைந்தனர். தொடர்ந்து முன்னேறிய அவர்கள், ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றினர். ஆனால் அதற்கு முன்னரே ஜனாதிபதி அஷ்ரஃப் கானி நாட்டை விட்டு வெளியேறியிருந்தார் என கூறப்படுகிறது.
அமெரிக்க துருப்புகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய பின்னர், சுமார் ஒரு வார காலத்தில் நாட்டின் பெரும்பகுதியை தங்கள் வசம் கொண்டு வந்துள்ளனர் தாலிபான்கள்.
காபூல் நகருக்குள் நுழைந்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதாக தாலிபான்கள் அறிவித்துள்ளது உண்மையில் துயரம் மிகுந்த நாள் என குறிப்பிட்டுள்ள ஆப்கான் நபர் ஒருவர், இனி இருண்ட காலத்திற்கு சென்றுவிடும் என்ற கவலையை பதிவு செய்துள்ளார்.
தாலிபான்கள் இல்லாத இந்த 20 ஆண்டு காலம் ஆப்கானிஸ்தான் சொல்லிக்கொள்ளும் வகையில் வளர்ச்சி பெற்றுள்ளதாக கூறும் அவர், பெண்களுக்கு உரிய மரியாதை அளித்துள்ளதையும் சுட்டிக்காட்டினார்.
அதனாலையே, இந்த பேரணியில் தாம் கலந்து கொண்டுள்ளதாக கூறும் அவர், ஆப்கானிஸ்தானின் எதிர்காலத்திற்காக குரல் எழுப்ப வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.