காபூல் குண்டுவெடிப்பு தாக்குதல் குறித்து ஆப்கான் கிரிக்கெட் வீரர் ரஷீத் கான் வெளியிட்ட தகவல்
காபூல் குண்டுவெடிப்பு குறித்து கருத்து தெரிவித்திருக்கும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரஷீத் கான், “காபூலில் மீண்டும் இரத்தம் வழிகிறது” என தெரிவித்திருக்கிறார்.
நேற்று ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதுகுறித்து ரஷீத் கான் தனது ட்விட்டரில் "காபூலுக்கு மீண்டும் இரத்தம் வழிகிறது, ஆப்கானைக் கொல்வதை நிறுத்துங்கள்" என்று அழுகை ஈமோஜிகளுடன் எழுதியிருக்கிறார்.
முன்னதாக அவர் ஆகஸ்ட் 10 அன்று, தனது நாட்டு மக்களை குழப்பத்தில் விடாதீர்கள் என்று உலகத் தலைவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார். தலிபான் பிடியில் ஆப்கானிஸ்தான் வந்த நாள் முதல் தொடர்ச்சியாக தொடர்ச்சியாக ஆப்கன் மக்களுக்காக குரல் கொடுத்து வருகிறார்.
Kabul is bleeding again ????
— Rashid Khan (@rashidkhan_19) August 26, 2021
STOP KILLING AFGHAN PLEASE ????????
தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றி இருந்தாலும் காபூல் விமான நிலையம் மட்டும் அமெரிக்க படைகளின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. வெளிநாட்டவர்களை அந்தந்த நாடுகள் விமானம் மூலம் தாயகம் அழைத்துச் சென்று வருகின்றன.
இது தவிர ஆயிரக்கணக்கான ஆப்கான் மக்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக காபூல் விமானநிலையம் அருகே குவிந்துள்ளனர். இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் விமான நிலையத்தின் வடக்கு நுழைவாயிலில் திடீரென மனித வெடிகுண்டு தாக்குதல் நிகழ்ந்தது.
இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் அடுத்த 30 நிமிடங்களில் அமெரிக்க படைகளின் கூடாரத்தில் மற்றொரு வெடிகுண்டு தாக்குதல் நிகழ்ந்தது. இந்த இரட்டை வெடிகுண்டு தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் உட்பட 108 பேர் கொல்லப்பட்டனர்.