அந்த நரகத்தில் இருந்து காப்பாற்றுங்கள்: கனடாவை கெஞ்சும் ஆப்கான் அகதிகள்
கனடாவில் வசித்துவரும் ஆப்கானிஸ்தான் புலம்பெயர்ந்தோர் பலர் தங்கள் குடும்பத்தினரை அந்த நரகத்தில் இருந்து மீட்டு வாருங்கள் என பெடரல் நிர்வாகத்தை கெஞ்சியுள்ளனர்.
கடந்த 2019 அக்டோபர் மாதம் 7 மாத கர்ப்பிணியாக இருந்த மினா என்பவர் தாலிபான்களுக்கு பயந்து ரொறன்ரோவுக்கு தப்பி வந்தார். மினா, சுகாதாரத்துறையில் பணியாற்றி வந்ததுடன், அங்குள்ள பெண்கள் சிறுமிகளுக்கு உடல் மற்றும் சுகாதாரம் தொடர்பில் கல்வி கற்பித்தும் வந்துள்ளார்.
கனடாவுக்கு வந்த பின்னர் ஓராண்டில் அவருக்கு அகதி அந்தஸ்து அளிக்கப்பட்டது. ஆனால் தற்போதும் தமது 3 பிள்ளைகள் மற்றும் கணவரை எதிர்பார்த்து காத்திருக்கிறார்.
தாலிபான்கள் தற்போது தங்கள் வெற்றியை அறிவித்துள்ளதால், மிக மோசமான விளைவுகள் தங்கள் குடும்பத்திற்கு ஏற்படலாம் என மினா பீதியில் உள்ளார்.
குடும்பத்தாருடன் ஒன்றிணைய வேண்டும் என்ற மினாவின் மனுவுக்கு உரிய நடவடிக்கை முன்னெடுக்க மேலும் 6 மாதங்கள் வரையில் ஆகலாம் என்றே கூறப்படுகிறது.
காபூல் நகரில் இருந்து தங்கள் குடும்பங்கள் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும் என மின கேட்டுக்கொண்டுள்ளார். மினாவைப் போலவே, முகமத் என்பவரும் கனடாவில் தனது குடும்பத்திற்கு தற்காலிக அந்தஸ்து வழங்குமாறு அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
காபூலை தாலிபான் கட்டுப்பாட்டில் கொண்டுவந்திருப்பதை அறிவது திகிலூட்டுவதாக உள்ளது என கூறும் முகமது, தனது மகள்களை கடத்தி தாலிபான் போராளிகளுக்கு மணமகளாக கொடுக்கப்படும் வாய்ப்புகள் மிக அதிகம் என்று அஞ்சுகிறார்.
தமது மூத்த பிள்ளைகள் அனைவரும் பெண்கள் என குறிப்பிட்டுள்ள முகமது, அது இனி நரமாக மாறும் எனவும் அவர்கள் தற்போதைய சூழலில் காபூலில் இருப்பது மிக ஆபத்தானது எனவும் தெரிவித்துள்ளார்.