பெட்டி படுக்கையுடன் ஆப்கானிஸ்தானிலிருந்து புறப்பட்ட கனேடிய குடும்பம்: மீட்புப்பணி நிறுத்தப்பட்டதால் தவிப்பு
ஆப்கன் தலைநகர் காபூலில் விமான நிலையத்துக்கருகில் குண்டு வெடித்ததைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தானிலிருந்து கனேடியர்களை மீட்கும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இதனால், ஆப்கானிஸ்தானில் சிக்கியிருக்கும் கனேடியர்கள் நம்பிக்கையிழந்த நிலைக்கு ஆளாகியுள்ளார்கள்.
இது குறித்து கனேடிய செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்த கனேடியர் ஒருவர், வெளியே நடந்த பயங்கரம் தன் பிள்ளைகளுக்கு தெரியாமல் இருப்பதற்காக, அவர்கள் கவனத்தைத் திசை திருப்பும் வகையில், அவர்கள் கையில் மொபைல்கள், டேப்களைக் கொடுத்து விளையாடச் சொல்லியிருப்பதாக தெரிவிக்கிறார்.
13 ஆண்டுகளாக ரொரன்றோவில் தன் குடும்பத்துடன் வாழ்ந்துவந்த அவர், உறவினர்களைக் காண்பதற்காக ஆப்கானிஸ்தான் வந்திருந்த நேரத்தில்தான் தாலிபான்கள் கையில் வீழ்ந்துள்ளது ஆப்கானிஸ்தான்.
ஒரு நாள் பெட்டி படுக்கையுடன் விமான நிலையம் நோக்கி புறப்பட்ட தந்தையிடம், நாம் எங்கே போகிறோம் என்று அவருடைய ஐந்து பிள்ளைகளில் ஒருவனான ஆறு வயது மகன் கேட்க, பிக்னிக் செல்கிறோம் என்று கூறியிருக்கிறார் அவர்.
மெயின் ரோடு வழியாக சென்றால் தாலிபான்களிடம் சிக்கிக்கொள்வோம் என்று அஞ்சி எங்கெல்லாமோ சுற்றி வந்தும், விமான நிலையத்தை அடைய முடியாமல் போயிருக்கிறது அந்தக் குடும்பத்துக்கு.
பின்னர், அப்பா, இந்த பிக்னிக் நன்றாகவே இல்லை, ஏனென்றால் நாம் கனடாவை வந்தடையவில்லையே என்றானாம் அந்த ஆறு வயது சிறுவன்.
இதற்கிடையில் காபூலில் குண்டு வெடிக்க, மீட்புப் பணி நிறுத்தப்பட்டுள்ளது. நிலைமை சீரடைவது வரை கனேடியர்கள் விமான நிலையத்துக்கு வரவேண்டாம் என்றும், பாதுகாப்பாக இருந்துகொள்ளுமாறும் கனடா அரசு கனேடிய குடிமக்களையும், வாழிட உரிமம் கொண்டவர்களையும் கேட்டுக்கொண்டுள்ளது.