எயார் கனடா ஓடுபாதையில் தீயணைப்பு வாகனத்துடன் மோதி பாரிய விபத்து; பயணிகள் நிலை என்ன!
அமெரிக்கா நியூயோர்க்கின் லாகார்டியா வானூர்தி நிலையத்தில் நேற்று(22) இரவு மாண்ட்ரியலில் இருந்து புறப்பட்ட எயார் கனடா எக்ஸ்பிரஸ் (Air Canada Express) வானூர்தி ஒன்று ஓடுபாதையில் தீயணைப்பு வாகனத்துடன் மோதி பாரிய விபத்துக்குள்ளானது.
ஜாஸ் ஏர்லைன்ஸ் (Jazz Aviation) நிறுவனத்தால் இயக்கப்படும் போம்பார்டியர் CRJ-900 ரகத்தைச் சேர்ந்த இந்த வானூர்தி, ஓடுபாதை 4இல் (Runway 4) தரையிறங்கிய போது சுமார் 39 கி.மீ வேகத்தில் அங்கு நின்றிருந்த தீயணைப்பு வாகனத்துடன் (Truck 1) மோதியுள்ளது.

ஆபத்தான நிலையில் நான்கு தீயணைப்பு வீரர்கள்
இந்தக் கோர விபத்தில் தீயணைப்பு வாகனத்தில் இருந்த துறைமுக அதிகார சபையின் நான்கு தீயணைப்பு வீரர்கள் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தின் போது வானூர்தியில் சுமார் 100 பயணிகள் இருந்துள்ளனர். அவர்கள் அனைவரும் நியூயோர்க் பகுதியைச் சேர்ந்த 'ஆர்த்தடாக்ஸ் யூதர்கள்' (Orthodox Jews) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மோதலுக்கு சில நொடிகள் முன்பாக, வானூர்திக் கட்டுப்பாட்டு அறையில் இருந்து "நில், நில், நில்" (Stop, stop, stop) என அதிகாரிகள் கூச்சலிட்ட ஒலி பதிவுகள் வெளியாகியுள்ளன.
இந்த விபத்தினால் வானூர்தியின் முன்பகுதி பலத்த சேதமடைந்து தரைக்கு மேல் உயர்ந்து காணப்படுவதுடன், லாகார்டியா வானூர்தி நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு அனைத்து வானூர்திச் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.