பாகிஸ்தானில் சமூக வலைதளங்கள் அனைத்தும் முடக்கம்!
பாகிஸ்தானில் நேற்று காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை சமூக வலைதளங்கள் அனைத்தும் முடக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரான்ஸ் நாட்டில் வெளிவரும் சார்லி ஹேப்டோ பத்திரிக்கையில் குறிப்பிட்ட மதத்தின் கடவுளை அவமதிக்கும் வகையில் கேலிசித்திரம் வெளியிடப்பட்டதாக சர்ச்சை ஏற்பட்டது.
இந்த விவகாரத்தில் சார்லி ஹேப்டோ பத்திரிக்கைக்கு ஆதராகவும், கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுப்பதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அறிவித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான், வங்காளதேசம் உள்ளிட்ட நாடுகளில் போராட்டங்கள் வெடித்த நிலையில் அதன் பின்னர் அந்த விவகாரம் சற்று தணிந்திருந்தது.
இதற்கிடையில், பாகிஸ்தான் நாட்டில் தெஹ்ரிக் - இ - லப்பைக் பாகிஸ்தான் என்ற தீவிர வலதுசாரி அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் தலைவராக சாத் ரிஸ்வி என்பவர் செயல்பட்டு வரும் நிலையில் அந்த அமைப்பு சார்பில் பாகிஸ்தான் நாட்டில் பிரான்ஸ் அரசுக்கு எதிராக போராட்டங்கள் தொடங்கியது.
அவர்களின் போராட்டம் பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் வன்முறையாக மாறியதுடன் பல்வேறு பகுதிகளில் கடைகள், அலுவலகங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. வன்முறையை ஒடுக்க பொலிசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வந்த போது வன்முறைக்காரர்களுக்கும் பொலிசாருக்கும் பல இடங்களில் மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலில் இதுவரை 4 பொலிஸார் பலியானதுடன் 600-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதனையடுத்து , வன்முறை சம்பவங்கள் நாட்டின் பிற பகுதிகளுக்கும் வேகமாக பரவி வருவதை தடுக்கும் வகையில் பாகிஸ்தானில் நேற்று 5 மணி நேரம் சமூக வலைதளங்கள் அரசால் முடக்கப்பட்டன.
அதன்படி நேற்று காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை பாகிஸ்தானில் வாட்ஸ் அப், பேஸ்புக், டுவிட்டர், டிக்டாக், இன்ஸ்டாகிராம், யூடியூப் ஆகிய அனைத்து சமூக வலைதளங்களும் முடக்கப்பட்ட நிலையில் அந்த தடை மாலை 5 மணிக்கு மேல் நீக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.