கனடாவில் 3 வயது சிறுவன் தொடர்பில் விடுக்கப்பட்ட அம்பர் எச்சரிக்கை
கியூபெக் பிராந்தியத்தில் 3 வயது சிறுவன் கடத்தப்பட்ட விவகாரத்தில் அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிறுவன் விவகாரத்தில் இதுவரை உறுதியான தகவல் ஏதும் வெளிவராத நிலையில் நியூ பிரன்சுவிக் பிராந்தியத்திலும் தேடுதல் நடவடிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் கியூபெக் மாகாண காவல்துறை வெளியிட்ட தகவலில், சிறுவன் Jake Côté ஆகத்து 31ம் திகதியில் இருந்தே மாயமானதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து புதன்கிழமை தொடக்கம் கியூபெக் மாகாணம் பரவலாக தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, வடமேற்கு நியூ பிரன்சுவிக்கின் Madawaska, Restigouche மற்றும் Gloucester ஆகிய பகுதிகளில் உள்ள குடிமக்களிடம் சிறுவன் தொடர்பிலும் கடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் தொடர்பிலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், விசாரணையும் முன்னெடுக்கப்பட்டது.
பழுப்பு நிற தலைமுடியுடன், 14 கிலோ உடல் எடை கொண்ட சிறுவன் Jake Côté தமது தந்தை David Côté என்பவரால் கடத்தப்பட்டுள்ளது முதற்கட்ட விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
பொலிசார் தற்போது வெளியிட்டுள்ள தகவலில், David Côté தமது மகனுடன் நடந்து செல்லவும் அல்லது வாகனத்தில் பயணப்படவும் வாய்ப்புகள் உள்ளது என்கின்றனர். மேலும், பொதுமக்களும் வகன சாரதிகளும் சிறுவன் மற்றும் David Côté தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் எனவும், விசாரணைக்கு ஒத்துழைக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மட்டுமின்றி, David Côté ஆயுதம் ஏந்தியிருக்கலாம் என்றும், அவரைப் பார்க்கும் எவரும் அவரை நெருங்க முயற்சிக்கக் கூடாது என்றும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.