இயல்பு நிலைக்கு திரும்புகிறது அமெரிக்கா...முகக்கவசம் இல்லாமல் வந்த அதிபர் ஜோ பைடன்
கொஞ்சம் கொஞ்சமாக அமெரிக்கா இயல்பு நிலைக்கு திரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளன.
கொரோனாவின் முதல் அலையில் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. எனவே அங்கு தடுப்பூசி போடும் பணிகளுக்கு அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்து முழுவீச்சில் போட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து அமெரிக்காவில் முழுமையாக (2 டோஸ்கள்) தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் முக கவசம் அணிய தேவையில்லை என அந்த நாட்டு நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் (சி.டிசி.) அறிவித்தது.
சி.டி.சி.யின் இந்த பரிந்துரையை அரசும் செயல்படுத்தி உள்ளது. அதன்படி ஜனாதிபதி ஜோபைடன் மற்றும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஆகியோர் நேற்று முக கவசம் இல்லாமலேயே செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பைடன் கூறுகையில், ‘இது ஒரு மிகப்பெரிய மைல்கல் என்று நான் நினைக்கிறேன்.
இது ஒரு சிறப்பான தினம். ஏராளமான அமெரிக்கர்களுக்கு இவ்வளவு விரைவாக தடுப்பூசி போடுவதில் நாம் பெற்ற அசாதாரண வெற்றிகளால் இது சாத்தியமானது’ என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு கொரோனா அச்சுறுத்தல் மிக மிக குறைவாகவே இருப்பதாக கூறிய பைடன், எனவே முழுமையாக தடுப்பூசி போட்டவர்கள் முக கவசம் அணிய தேவையில்லை என்றும், ஆனால் 2 டோசும் போட்டு முடிக்காதவர்கள் அணிய வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இதன் மூலம் அமெரிக்காவில் கொரோனாவுக்கு முந்தைய இயல்பு நிலை திரும்பி வருவதாக மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.