கொரோனா தொற்றினால் அதிரும் அமெரிக்கா; ஒரே நாளில் 10 லட்சம் பேருக்கு பாதிப்பு
அமெரிக்காவில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 10 லட்சம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒமைக்ரான் பரவல் காரணமாக உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் உலக வல்லரசு நாடான அமெரிக்காவை பந்தாடி வரும் ஒமைக்ரான் முன்னெப்போதும் இல்லாத வகையில் அங்கு பரவி வருகிறது. அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு பின்னர் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டி வருகிறது.
கடந்த ஏழு நாட்களில் சராசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4.13 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்த நிலையில்,தினசரி பாதிப்பில் புதிய உச்சமாக, 10 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
அதேவேளை ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகளின்படி 10,42,000 என்ற எண்ணிக்கையில் தொற்று ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த டிசம்பர் 31 ஆம் திகதி மணி நேரத்தில் 5,72,093 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இது இதற்கு முன்பு இதுவரை இல்லாத பாதிப்பாக இருந்த நிலையில் தற்போது அந்த எண்ணிக்கையை விட இரு மடங்கு தொற்று பாதிப்பு உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.