கியூபாவில் அமெரிக்க பிரஜை சுட்டுக்கொலை
கியூபா கடற்கரைக்கு அப்பால் அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட அதிவேகப் படகு ஒன்றை கியூபா எல்லைப் பாதுகாப்புப் படையினர் வழிமறித்து நடத்திய துப்பாக்கிச் சூட்டில், ஒரு அமெரிக்கப் பிரஜை கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த புதன்கிழமை (25) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், படகில் இருந்த 10 பேரில் நால்வர் கொல்லப்பட்டதுடன், ஏனைய அறுவர் காயமடைந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் ஒருவர் அமெரிக்கப் பிரஜை என்பதையும், மற்றொருவர் அமெரிக்காவின் 'மு-1' விசாவைக் கொண்டவர் என்பதையும் அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அதேவேளை குறித்த படகு "பயங்கரவாத நோக்கங்களுடன் ஊடுருவ" முயன்றதாக கியூபா குற்றம் சாட்டியுள்ளது. படகில் இருந்தவர்களே முதலில் துப்பாக்கிச் சூட்டைத் தொடங்கியதாகவும், தற்காப்புக்காகவே தாம் பதிலடி கொடுத்ததாகவும் கியூபா உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் படகிலிருந்து கைத்துப்பாக்கிகள், தாக்குதல் துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில், குறித்த சம்பவம் "மிகவும் அசாதாரணமானது" என அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கப் படைகள் கைது செய்ததைத் தொடர்ந்து, கியூபாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நிலவும் இராஜதந்திரப் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது