200 இந்தியர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்த அமெரிக்க நிறுவனம்
மோசடி குற்றச்சாட்டின் பேரில் இந்தியர் 200 பேரை அமெரிக்க நிறுவனம் பணி நீக்கம் செய்தது. பெடரல் நேஷனல் மார்ட்கேஜ் அசோசியேஷன் ( எப்.என்.எம்.ஏ ), எனப்படும் இந்நிறுவனம் பொதுவாக பேன்னி மே என்று அழைக்கப்படுகிறது.
இந்த நிறுவனம் அமெரிக்க அரசாங்கத்தால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. அடமான நிறுவனமான பேன்னி மே, அமெரிக்காவின் வாஷிங்டனை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வருகிறது.
நிதி மோசடி
இந்நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்கள் 200 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலோர் தெலுங்கு பின்னணியைச் சேர்ந்தவர்கள்.
நிறுவனங்களை ஏமாற்றவும் நிதியை தவறாகப் பயன்படுத்தவும் வட அமெரிக்க தெலுங்கு சங்கத்துடன் கூட்டுச் சேர்ந்ததாக பல ஊழியர்கள் மீது மோசடி குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களில் ஒருவர், சங்கத்தின் பிராந்திய துணைத் தலைவராக இருந்ததாகவும், மற்றொருவர் அமெரிக்க தெலுங்கு சங்கத்தின் முன்னாள் தலைவரின் மனைவி என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பேன்னி மேயுடன் பணிபுரியும் சிலர், ஏப்ரல் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் பணிநீக்கங்கள் செய்யப்பட்டதாகவும், அவை நெறிமுறை அடிப்படையில் செய்யப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.